குட்டிக்கதைகள்
ஒன்று மட்டும் உறுதி
ஒரு ஊரில் ஒரு குருடன் இருந்தான். அவன் தன் கரங்களால் தொட்டுப் பார்த்தே வெவ்வேறு மிருகங்களை அறிந்து கொள்ளப் பழகியிருந்தான்.
ஒரு முறை ஓநாய்க்குட்டி ஒன்று அவனிடம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொட்டுப் பார்த்து அது என்ன மிருகம் என்று கூற வேண்டும் எனக் கூறினார்கள் ஊர்க்காரர்கள்.
அவன் அதைத் தொட்டுப் பார்த்தான். பிறகு சொன்னான்.
இது நரிக் குட்டியா? ஓநாய்க் குட்டியா? என்பது எனக்குத் தெரியவில்லை; சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூற முடியும். இந்த குட்டியை ஆட்டு மந்தையில் விட்டால் ஆடுகளுக்கு ஆபத்து.
இழிவின் அடையாளம்
ஒரு ஊரில் ஒரு நாய் இருந்தது. அது யாரைப் பார்த்தாலும் அவர்கள் காலில் விழுந்து கடித்து வைத்தது. அதனால் அந்த நாயை வளர்த்தவர் பலரிடமும் திட்டு வாங்க நேர்ந்தது. ஆகவே, அவர் அந்த நாயின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டி விட்டார். அந்த மணிச் சப்தம் கேட்டதும் அந்தக் கடிநாய் தான் வருகிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த நாயோ இது தனக்கு வழங்கப்பட்ட பெருமை என்று கருதிக் கொண்டு தெரு, சந்தை என்று எல்லா இடத்திற்கும் சென்று தனது மணியை அடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு கிழட்டு வேட்டை நாய் அதனிடம் இந்த மணியை நீ உனக்கு வழங்கப்பட்ட கௌரவம் எனக் கருதுகிறாய். அப்படி அல்ல. இது இழிவின் அடையாளம்; நீ ஒரு கடிநாய் என்று மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காகக் கட்டுப்பட்டுள்ள மணி இது என்று சொன்னது.
கூவியதால் வந்த கொடுமை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் யார் இரை தேடுவது என்பதில் இரண்டு சேவல்-களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மோதலில் தோற்றுப் போன சேவல் ஒரு மூலையில் சென்று பதுங்கிக் கொண்டது. வெற்றி பெற்ற சேவலோ பெருமிதத்துடன் பறந்து ஒரு சுவர் மீது ஏறி நின்று இறக்கைகளைப் படபட என அடித்துக் கொண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்தம் போட்டு மகிழ்ச்சி கொண்டாடியது. அப்போது வானத்-தில் பறந்து கொண்டிந்த ஒரு கழுகு அதன் மேல் பாய்ந்து கவ்விக் கொண்டு சென்றது. பதுங்கியிருந்த சேவல் மூலையை விட்டு வெளியே வந்து போட்டிக்கு யாரும் இல்லாததால் தன்னிஷ்டப்படி இரை தின்றது.
குழந்தைகள்
குழந்தைகள் புத்தகங்கள்! அவர்களைக் கிழித்து விடாதீர்கள்! மென்மையாகக் கையாளுங்கள்! குழந்தைகள் மலர்கள்! அவர்களைக் கசக்கி விடாதீர்கள்! குழந்தைகள் தெளிந்தநதி! மாசுபடுத்தி விடாதீர்கள்! குழந்தைகள் குடும்பச் சொத்து அல்ல! தேசத்தின் சொத்து! அவர்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும், முறையாக வளர்ப்பதும் நமது அன்றாட அவசியக் கடமையாகும்.
- தவத்திரு பொன்னம்பல அடிகளார்
தகவல்: ஜா.எ. டார்வின் தமிழ், 5ஆம் வகுப்பு, காரைக்குடி - 2
|