அச்சம் என்பதை அறியாதார்

பெரியார் என்பவர் ஈவெரா
பெயரை எவரும் சொல்வதில்லை
அறிஞர் முதலாய் ஆண்டிவரை
அனைவரும் மதிக்கும் நம்பெரியார்!
எதனால் பெரியார் என்றவரை
ஏற்றிப் போற்றிச் சொல்கின்றார்?
அதனைக் கொஞ்சம் அறிந்தாலே
“ஆம்அவர் பெரியார்” எனக்கொள்வர்!
தன்னலம் சிறிதும் கொள்ளாமல்
தடைகள் எதற்கும் தளராமல்
முன்னால் எதிர்ப்போர் நின்றாலும்
முன்போய் நின்று முழங்கியவர்!
அச்சம் என்பதை அறியாதார்
அயர்ச்சி இறுதி வரையில்லை
துச்சம் என்றே எதிர்ப்புகளைத்
துரத்தி விட்ட மாவீரர்!
மூடக் கொள்கை எதுவெனினும்
முன்போய் நின்று சாடியவர்
தேடித் தேடிப் புதுவழிகள்
செப்பி நல்வழி காட்டியவர்!
அறிவியல் வழியில் சிந்திக்க
அறிவுரை சொல்லி ஊக்கியவர்
தரமில் லாத எதனையுமே
தள்ளி ஒழிக்கச் சொல்லியவர்!
மானமும் அறிவும் மனிதர்க்கு
மங்கா அழகென முழங்கியவர்
வீணாம் மூட நம்பிக்கை
வீழ்த்தி வெற்றி காண்கவென்றார்!
எதுநம் பண்பென உணர்ந்திடவே
எடுத்துச் சொல்லி விளக்கியவர்’
புதுவழி அதனால் நாம்உணர்ந்து
பொலிவு பெற்றோம்; புகழ்பெற்றோம்!
பெரியார் செய்த தொண்டால்தான்
பெரும்பெரும் வெற்றிகள் நாம்கண்டோம்;
உரிமை வாழ்வு நாம் பெற்றோம்
உண்மை விளங்கி ஓங்கி நின்றோம்.
பெரியார் சொன்னதைச் சிந்திப்போம்;
பெரியார் வழியில் நாம்நடப்போம்!
தெரிவோம் உண்மை தெளிவுறுவோம்;
தீதுஅணு காமல் ஓங்கிடுவோம்!
– முனைவர் முரசு நெடுமாறன்







