புத்துணர்ச்சி பெறவே கோடை விடுமுறை புரிந்து செயல்படுங்கள் !
| க |
ாலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை விடுவது வழக்கம். ஆனால் அந்த விடுமுறை ஒரு வார கால அளவில் இருக்கும். முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடப்படும் விடுமுறை மட்டும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாய் இருக்கும். அது ஏன்?
வெய்யில் கடுமையாக இருக்கும் என்பதாலா? அப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் வெய்யில் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்போது விடுமுறை விடப்படுவதில்லை மாறாக அப்போதுதான் தேர்வுகள் நடக்கின்றன.
அப்படியென்றால் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் ஏன் நீண்ட விடுமுறை?
முழு ஆண்டுத் தேர்வு அந்தக் கல்வி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அத்தோடு அந்தக் கல்வியாண்டு முடிகிறது. அதன் பிறகு அடுத்த கல்வியாண்டு வர இருக்கிறது. ஒரு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு வருவதற்கு இடையில் இந்த விடுப்பு விடப்படுகிறது.
ஓர் ஆண்டு முழுவதும் கண்விழித்து, சிரமப்பட்டு அதிகம் உழைத்துப் படித்த மாணவர்களின் மூளை களைத்துப் போய் இருக்கும். உடலும் சோர்வடைந்திருக்கும். அப்போது, ஒரு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வு அளிக்கப்படாமல், உடனே அடுத்த கல்வியாண்டைத் தொடங்கி மாணவர்களைத் தொடர்ந்து படிக்கச் சொன்னால், ஆர்வமின்றி அலுப்புடன் பள்ளிக்குச் செல்வர். பள்ளிக்குச் செல்வதிலும், படிப்பதிலும் ஒரு வெறுப்பு ஏற்படும்.
ஒரு நாள் முழுவதும் உழைத்தவர்களை இரவு நன்றாக ஓய்வெடுத்துச் தூங்கச் செய்தால் மறுநாள் வேலையைச் சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செய்வர்.
மாறாக நாள் முழுவதும் உழைத்துவிட்டு வந்தவர்களைத் தொடர்ந்து வேலை வாங்கினால், அவர்களால் செய்ய முடியாது. அது அவர்கள் உடல் நலத்தையும் உள்ள வளத்தையும் பாதிக்கும். எனவே தான் அடுத்த நாள் வேலைக்குச் செல்வதற்கு முன் ஒரு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஓர் ஓய்வை மாணவர்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் அளிக்கப்படுவதே கோடை விடுமுறை.
விடுமுறையில் புத்துணர்ச்சி
விடுமுறையில் புத்துணர்ச்சி பெறுவது எப்படி? பெற்றோரும், பிள்ளைகளும் இதை நன்றாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் சிரமப்பட்டு உழைத்தும் படித்த பிள்ளைகளுக்கு விடுமுறைக் காலம் முழுவதும் வீட்டிலே நன்றாகத் தூங்கச் செய்யலாமா? அல்லது விளையாடச் செய்யலாமா? அல்லது சுற்றுலா செல்லலாமா? உறவினர் வீட்டிற்குச் செல்லலாமா? நண்பர்களுடன் சேர்ண்டு ஆடிப்பாடி மகிழலாமா? எதைச் செய்ய வேண்டும்? கேள்வி எழும். பதில் என்ன தெரியுமா? இவை எல்லாவற்றையும் கலந்து செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இரவில் நன்றாக உறங்க வேண்டும். காலையில் செய்தித்தாள், தொலைக்காட்சி பார்க்க வேண்டும். அதன் பின் குடும்பத்தவருடன் பழகிப் பேசி மகிழ வேண்டும். ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் தங்களுக்குள்ள தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும். ஓவியம் வரைதல், இசைப்பயிற்சி, கேரம், செஸ் விளையாடுதல், கதை, கட்டுரை, பொது அறிவு நூல்கள் படித்தல் செய்தல் வேண்டும். தங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதைத் தேர்வு செய்து செய்தல் வேண்டும். மாலை இரண்டு மணி நேரம் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்வாக விளையாட வேண்டும். இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் 10 மணியளவில் படுக்கச் செல்ல வேண்டும்.
எச்சரிக்கையாக இருப்பது கட்டாயம்
உறவினர் வீடுகளுக்கு ஒரு வாரம், சுற்றுலா செல்ல ஒரு வாரம் ஒதுக்கி மகிழ்ச்சியுடன் இருக்கலாம். அப்படி உறவினர் வீட்டிற்கோ, சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் போது விழிப்புடனும் இருக்க வேண்டும். புது இடம் என்பதால் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு, வாய்க்கால், கிணறு, குளம் போன்றவற்றில் குளிக்கச் செல்லும் போதும், மலைச்சரிவுகளில் செல்லும் போதும் பழக்கம் உள்ளவர்களின் துணையுடன் செல்வதுதான் சிறந்தது. தனியாகச் சென்று ஆபத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாது. புது இடங்களில் நீரின் ஆழம் தெரியாமல் மூழ்கும் நிலை வரும். நீரில் அடித்துச் செல்லப்படவும் வாய்ப்பு உண்டு.
கடும் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி எல்லாவற்றையும் பின்பற்ற வேண்டும். சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்காக, உயிருக்கு ஆபத்தான செயல்களைச் சாதனையென்ற பெயரில் செய்ய முற்படக்கூடாது. சாதிக்க வேண்டியவை உங்களுக்கு நிறையவுள்ளன அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
புத்துணர்ச்சி பொருள் என்ன?
ஒரு மாத காலம் நம் உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சி பெற செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதிலும் புரிதல் வேண்டும். புத்துணர்ச்சிக்கு ஓய்வு வேண்டும் என்பதால் எதையும் செய்யாது ‘கம்’மென்று சும்மா இருப்பது அல்ல. செய்யும் செயலை மாற்றுவதன் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். படித்துக் கொண்டிருந்தால் அலுப்பு ஏற்படுகிறது என்றால், ஒரிரு மணி நேரம் விளையாடினால் புத்துணர்ச்சி கிடைக்கும். கதை படிப்பதில் அலுப்பு ஏற்படுகிறது என்றால் ஓவியம், தோட்டவேலை செய்தல், பூஞ்செடி வைத்தல் செய்யலாம். வீட்டிலேயே இருபது வெறுப்பாய் உள்ளது என்றால், வேறு பிடித்தமான இடங்களுக்கு, தோப்பு, பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்வதன் மூலம் புத்துணர்ச்சி பெறலாம்; பெற வேண்டும்.
சிறப்பு வகுப்பு கூடாது
கோடை விடுமுறை எதற்காக விடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாத சில பெற்றோர்கள், சில பள்ளிகள், சில பயிற்சி நிறுவனங்கள், அடுத்த ஆண்டு பாடங்களை நடத்துதல், நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்தல் போன்றவை கூடாது. அது ஒருவகையில் மாணவர்களுக்கு எதிரான குற்றச் செயல் என்றே சொல்லாம். அது மாணவர்களைப் புத்தகப் புழுவாக்கி, மன நோயாளியாக மாற்றிவிடும்.
அதிக மதிப்பெண், மருத்துவப் படிப்பு என்று மாணவர்களை கசக்கக் கூடாது. அதிக மதிப்பெண் பெறாத சராசரி மாணவர்கள் பிற்காலத்தில் சாதிக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவம் படித்தவர்களை விட, மற்ற வேலையில் இருப்பவர்கள் அதிகம் வருவாய் ஈட்டுகின்றனர் என்பதே நடைமுறை உண்மை. மருத்துவர் என்பதைவிட ஆசிரியர் என்பது சிறப்பு குறைந்தது அல்ல. முதல் மதிப்பெண் என்று முனைந்து முயற்சிப்பதும் ஒருவகையில் அறியாமையே! இன்னொருவரோடு போட்டி போடுவதைவிட, நமக்கு எவ்வளவு மதிப்பெண் தேவை அதைப்பெற முயல வேண்டும். இன்னொருவரை விட… என்ற போட்டியை விட நமக்கு தேவையானதைப் பெறுவதே ஒரு அறிவுடைமை. நிம்மதியாய் வாழ நமக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதைப் பெற நேர்மையாய் முயல வேண்டும். மாறாக, அடுத்தவரை விட நாம் பணக்காரர் ஆக வேண்டும் என்று போட்டி போடுவது மன உளைச்சலை ஏற்படுத்தும்; மகிழ்வை ஒழிக்கும்,
நிம்மதியில்லாமல் செய்யும் மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர் மனதில் கொள்ளுங்கள்!
புரிந்து கொண்டு புத்துணர்ச்சி பெறுங்கள் வருங் கல்வியாண்டு உற்சாகமாய், மகிழ்வாய் அமையும்!