மனிதரையும் விலங்குகளையும் பிரிப்பது எது? எப்படி ? ஏன்?
| ப |
ரிணாம வளர்ச்சியில் மனிதர்களும். மனிதக் குரங்குகளும் ஒரே பாதையில் தோன்றிப் பிரிந்தவை. எது நம்மைப் பிரிக்கிறது என்று தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றுடன் உரையாட சைகை மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதக் குரங்குகள் சைகை மொழியைக் கற்றுக் கொண்டு, மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கிவிட்டன. ஆனால், அவற்றால் எந்தக் கேள்வியையும் சொந்தமாக எழுப்ப முடியவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
சான்பிரான்சிஸ்கோ உயிர்காட்சி சாலையில் இருந்த கோகோ (KoKo) என்ற மனிதக் குரங்கு (04.07.1971 – 19.06.2018) 1,000 சைகைகளையும், 2000 ஆங்கில வார்த்தைகளைக் கேட்டும் புரிந்து கொண்டது. தனக்கு விருப்பமான பூனைக் குட்டியை அழைத்து வரச் சொல்லி அதனால் சொல்ல முடிந்தது. அதன் வருத்ததையும் கோபத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதேபோல அண்மையில் மறைந்த (28.10.1980 – 18.03.2025) கான்ஸி (Kanzi) என்ற போனோபோ மனிதக் குரங்கு, தீ, மஸ்க்மெலோஸ் போன்ற வற்றைக் குறிப்பிடப் பழகியிருந்தது.
ஆனால் அவற்றால், மனிதர்களைப் போல தானாகக் கேள்வி கேட்க முடியவில்லை. ஏன் எதற்கு எப்படி என்று அறிய விரும்பும் ஆர்வம் அவற்றுக்கு உண்டா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
சிரிப்புதான் மனிதனின் தனித் தன்மையான குணம் என்பார்கள். மனிதக் குரங்கு வகைகள் சிரிப்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். எனவே கேள்வி கேட்கும் அறிவுதான் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் பிரிக்கும் ஒன்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எதையும் கேள்வி கேட்டு உண்மையென்றால் ஏற்பதுதான் பகுத்தறிவு. அதைத் தான் சாக்ரடீஸ், வள்ளுவர் முதல் நம் பெரியார் தாத்தா வரை சொன்னார்கள்.
நாம் மனிதராக இருக்கிறோம் என்பதன் அடையாளமே கேள்வி கேட்டு அறிய விரும்பும் அறிவுதான். அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாமா?<
