ஒருவரையும் விடக் கூடாது அரசு பள்ளி ஆசிரியரின் சாதனை
| த |
ுர்கா, தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள மலைவாழ் கிராமத்தில், ஆடுகளை மேய்த்துக் கொண்டு இடம் பெயரும் நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, ஒவ்வோர் ஆண்டும் பசுமையான கர்நாடக மலைப்பகுதிக்கு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை அவளின் குடும்பம் இடம்பெயரும்.
திருவண்ணாமலை மாவட்டம் சவ்வாது மலையிலுள்ள மலைக் கிராமமான அரசவல்லியில் அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மகாலட்சுமி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு வராத, வர இயலாத பழங்குடியின மாணவர்களை, அவர்களது வீட்டுக்கே சென்று பள்ளிக்கு அழைத்து வந்து படிக்க வைப்பதே வாடிக்கையாகக் கொண்டவர் ஆசிரியர் மகாலட்சுமி.
தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன்படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது. இதில் 1 முதல் 8 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி என்பதால், துர்கா அனைத்து வகுப்பிலும் தேர்ச்சி பெற்றாள்.
9 ஆம் வகுப்பு பயிலும் போது துர்கா பள்ளிக்கு வர மறுத்தாள். இரண்டு வாரங்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என நிபந்தனை விதித்து, கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஆசிரியர் மகாலட்சுமி முயற்சித்தார். ஆசிரியர் மகாலட்சுமி துர்காவை ஒருபோதும் கைவிடாமல், பள்ளிக்கு வராத நாட்களில் அவளது வீட்டுக்கு சென்று அழைத்து வந்து படிக்க வைத்தார். துர்காவின் குடும்பத்தினரிடம், “இந்த ஆண்டு அவளை எங்கும் அழைத்துச் செல்லாமல், தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவோம்” என உறுதிமொழி எழுதி வாங்கினார். விளக்கு வசதியில்லாத காடுகளில், துர்காவின் குடும்பத்தினர் கூடாரம் அமைத்து வசிப்பதால், இருட்டிய பிறகு தூங்கச் சென்று அதிகாலையில்தான் எழுவார்கள். இதனால் ஒன்பதாம் வகுப்பை முழுமையாக முடித்தாலும் எழுதுதல், வாசித்தல் போன்றவற்றை துர்கா முழுமையாகக் கற்பது மிகவும் கடினமாக இருந்தது.
ஓர் ஆண்டில் நான்கு மாதங்கள் பள்ளிக்குச் செல்ல இயலாத துர்காவிற்கு, படித்ததை மறந்து, மீண்டும் வகுப்புக்குச் செல்லும் போது, வகுப்பறையும் ஆசிரியரும் அவளுக்கு அந்நியமாக இருந்தது. பத்தாம் வகுப்பில் “பொதுத் தேர்வு” என்ற சொல்லும் மற்றும் தொடர்ச்சியான தேர்வுகளும், துர்காவின் பயத்தை மேலும் அதிகப்படுத்தியது பள்ளிக்கு மீண்டும் விடுப்பு எடுக்கத் தொடங்கினாள். வீட்டில் இல்லாமல் கூடாரத்திற்குச் சென்று விடுவாள். அங்கும் ஆசிரியர் மகாலட்சுமி தேடி வந்ததால், “பள்ளிக்கு வர மாட்டேன்; டி.சி. வாங்கி அய்.டி. அய். சேர்கிறேன்” என அம்மாவிடம் கூறினாள்.
துர்காவின் அம்மா ஆசிரியரை அழைத்து, “டி.சி. கொடுத்துடுங்க” என்றார். ஆனால், ஆசிரியர் துர்காவின் அம்மாவைத் தனியாக அழைத்து, “இப்படியே விட்டுவிட்டால் கல்வி இல்லாமல் இவரும் துன்பப்பட வேண்டுமா?” எனக் கேட்டார். பின்னர் துர்காவிடம் தொலைப்பேசியில், டி.சி. கேட்டதால் நம்பிக்கை போய்விட்டது என சற்று கோபமாகக் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
துர்காவின் அம்மா அவளை அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். ஆசிரியர் மகாலட்சுமி துர்காவைத் தனியாக அழைத்து, “எல்லா பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுக்க வைப்பது என் பொறுப்பு. எனக்காக 6 மாதம் பள்ளியில் இரு” எனக் கண்ணீருடன் கெஞ்சினார். ஆசிரியரின் இந்த நம்பிக்கை வார்த்தைகளால் நெகிழ்ந்த துர்கா கண்ணீருடன் வகுப்பறைக்குத் திரும்பினாள். அன்று முதல் கல்வியின் மீது முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டதால், 60%. மதிப்பெண்களுடன் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மீண்டு வந்தாள்.
துர்காவின் இந்த வெற்றி அரசுப் பள்ளிகள் வெறும் பாடங்களை மட்டுமல்ல மாணவர்களின்; வாழ்க்கையும் செதுக்குகின்றன என்பதற்கும், கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்கும், ஆசிரியர் மகாலட்சுமி அவர்களின் தன்னலமற்ற தொண்டுக்கான சான்றாகத் திகழ்கிறது.
பயத்தை வெல்வதே அறிவுடைமை ஆகும்!<
