Neuralink : பேச முடியாத மனிதருக்குப் புதிய குரல்
| அ |
ண்மையில் ஒரு வியப்பான செய்தி வெளியாகி உள்ளது. நரம்பியல் இணைப்பு (Neuralink) என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பேச முடியாத ஒரு மனிதர் ஒரு யூடியூப் (YouTube) வீடியோவுக்குக் குரல் கொடுத்துள்ளார். இந்தச் செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் என்ன செய்கிறது என்று பார்க்கலாமா? நம்முடைய மூளையில் இருந்து வரும் கட்டளைகளைப் படித்து, அவற்றைக் கணினிக்குப் புரியும் மொழியில் மாற்றிவிடும் ஒரு சிறிய கருவியைத்தான் நரம்பியல் இணைப்பு என்கிறார்கள். இந்தக் கருவியை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மூளையில் பொருத்திவிடுவார்கள்.
பிராட் ஸ்மித் என்ற ஒரு மனிதருக்குப் பக்க வாதம் வந்து பேசும் திறனை இழந்துவிட்டார். அவருக்கு இந்த நரம்பியல் இணைப்புக் கருவியைப் பொருத்தினார்கள். இப்போது அவர் தன்னுடைய எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி கணினியை இயக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், முன்பு தான் பேசிய வீடியோக்களை வைத்து செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் அவருடைய குரலை மீண்டும் உருவாக்கி இருக்கிறார். அந்தக் குரலைப் பயன்படுத்தி அவர் இப்போது ஒரு யூடியூப் வீடியோவுக்கு ‘narrate’ செய்துள்ளார்.
முன்பு அவர் கண்களை அசைத்து ஒரு கருவியின் உதவியோடுதான் மற்றவர்களிடம் பேச முடிந்தது. ஆனால், அது வெளிச்சம் இல்லாத இடங்களில் சரியாக வேலை செய்யாது. இப்போது இந்தப் புதிய கருவி மூலம் அவர் எங்கு வேண்டுமானாலும், எந்த வெளிச்சத்திலும் தனது எண்ணங்களைத் தெரிவிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய குழந்தைகளுடன் ‘Mario Kart’ போன்ற வீடியோ கேம்களையும் விளையாட முடிகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இந்த நரம்பியல் இணைப்புக் கருவி பார்ப்பதற்கு அய்ந்து ரூபாய் நாணயங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் இருக்குமாம். அதில் ஆயிரம் சின்னஞ்சிறிய கம்பிகள் இருக்கும். அதை அவருடைய மூளையின் இயக்கப் பகுதிக்குள் பொருத்தி இருக்கிறார்கள். அவர் எதையாவது செய்ய நினைக்கையில், அவருடைய மூளையில் இருந்து வரும் சமிக்கைகளை இந்தக் கருவி பிடித்துக் கொள்கிறது. உதாரணமாக, கணினியில் ஓர் அம்புக்குறியை (cursor) நகர்த்த வேண்டும் என்றாலோ அல்லது ஒரு பொத்தானை (click) அழுத்த வேண்டும் என்றாலோ, அவர் தன் நாக்கை அசைப்பது போலவோ அல்லது தாடையை இறுக்குவது போலவோ நினைத்தால் போதும். அந்த எண்ணங்களை இந்தக் கருவி கவனித்து கணினிக்குக் கட்டளையாக அனுப்புகிறது.
இப்போது இது அவருடைய எண்ணங்களை அப்படியே படிப்பதில்லை என்பதை அவர் தெளிவாகக் கூறுகிறார். தன் கையை அசைக்க வேண்டும் என்று நினைத்தால், அல்லது தன் நாக்கை அசைக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த எண்ணங்களை வைத்து கணினியை இயக்குகிறார். விஞ்ஞானிகள் இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இக்கருவி பல்லாயிரக்கணக்காணோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை.
இந்தக் கண்டுபிடிப்பு பேச முடியாத மற்றும் உடல் முழுவதும் செயல் இழந்த நிறைய பேருக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்களும் மற்றவர்களைப் போல தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும், பல விஷயங்களைச் செய்யவும் இது உதவும் என்று நம்பப்படுகிறது.
மனிதனுக்கு வரும் நோயை மதங்கள் சாபம் என்கின்றன. ஆனால், அறிவியலோ நோயை ஒழித்து சாதனை செய்கிறது.<