வாசிப்போம் – நேசிப்போம்

வாய்மணக்க வாய்மணக்க என்ன வேண்டும்?
வாய்மையொன்றே வாழ்வெல்லாம் காக்க வேண்டும்!
நோய்மறக்க நோய்மறக்க என்ன வேண்டும்?
நொந்தநிலை துறந்துவிட்டு உழைக்க வேண்டும்!
ஓய்வுக்கே ஓய்வுதர என்ன வேண்டும்?
ஊருக்குத் தொண்டாற்றும் எண்ணம் வேண்டும்!
காய்மனத்தைக் கனியவைக்க என்ன வேண்டும்?
கனித்தமிழின் குறள்படித்தே ஓத வேண்டும்!
நார்சிரிக்க நார்மணக்க என்ன வேண்டும்?
நல்லதொரு பூமாலை யாக்க வேண்டும்!
சீர்சிரிக்க சீர்மணக்க என்ன வேண்டும்?
சேர்த்துவைத்த பாடலிலே பொருளே வேண்டும்!
ஊர்சிரிக்க ஊர்செழிக்க என்ன வேண்டும்?
ஊர்நலமே தன்னலமாய் எண்ண வேண்டும்!
பார்சிரிக்க பார்செழிக்க என்ன வேண்டும்?
பாரெல்லாம் பொதுவுரிமை மலர வேண்டும்!
பூச்சிரிக்க பூச்சிரிக்க என்ன வேண்டும்?
புத்தம் புதுத்தென்றல் வீச வேண்டும்!!
காச்சிரிக்க காச்சிரிக்க என்ன வேண்டும்?
காலத்தில் கார்மேகம் பொழிய வேண்டும்!
நீசிரிக்க நீசிறக்க என்ன வேண்டும்?
நித்தம்புது நூல்களைநீ படிக்க வேண்டும்!
வாசிக்க வாசிக்க விரியும் ஞானம்!
வாசித்தால் நேசிப்பாய் உலகை நாளும்!<
– சுப.முருகானந்தம்







