காட்டுவாசி – 12
| ஏ |
ங்க… காட்டுவாசி நீங்க யாரு? எதுக்காக காட்டுக்குள்ளே குடில் போட்டுத் தங்கியிருந்தீங்க? அதைச் சொல்லுங்க… என நீதிபதி கேட்டதுமே…
உரக்கச் சிரித்தபடி சற்று முன்னால் வந்த காட்டுவாசி “நீதிபதி அய்யா, இதைத்தான் நான் முதல்லையே சொல்ல வந்தேன். நீங்க உங்க கதையைக் கேட்க நேரமில்லேன்னு சொல்லித் தடுத்துட்டீங்க. இப்ப முழுக் கதையையும் நான் சொல்லி முடிச்ச பிறகு மறுபடி நான் யாருங்கிறதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு” என்றார் காட்டுவாசி.
அவர் பேசும் போதே பார்வையாளர் பகுதியிலிருந்து (Files) கோப்புகளைக் கையில் வைத்திருந்த வனத்துறை அதிகாரி வேகமாக எழுந்து நீதிமன்றத்தின் நடுவில் வந்து நின்று, நீதிபதியை வணங்கி “இது எங்க வனத்துறையால் தயாரிக்கப்பட்ட ஆவணம். இதை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்று தன்னிடமிருந்த கோப்பை நீட்டினார்.
அதனைப் பெற்றுக்கொண்ட நீதிபதி கண்ணாடியைச் சரிசெய்தபடி அந்தக் கோப்பை வாசிக்கலானார்.
சற்று நேரத்தில் அவர் புருவம் உயர்ந்தது. காட்டுவாசியை இடையிடையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டே கோப்பு முழுவதையும் வாசித்து முடித்துவிட்டு காட்டுவாசியைப் பார்த்துப் புன்னகைத்தார். அதன்பின்,
“இங்கே நிக்கிற இந்தக் ‘காட்டு… வாசி’ உண்மையிலே காட்டுவாசியில்லே… அவர் யார் எதுக்காகக் காட்டுவாசியா இருந்தாருன்னு அவர் வாயாலேயே அவரே சொல்லட்டும்!” என்றார் நீதிபதி.
இப்போது நீதிமன்றத்தில் இருந்த அனைவருமே ஆச்சரியக் குறிபோல் நிமிர்ந்தனர்.
கம்பீரத் தோற்றத்துடன் நின்ற காட்டுவாசி பேசத் தொடங்கினார்.
“வடநாட்டில் மரச்சிற்பங்கள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பல தொழில் நிறுவனங்களோடு தொடர்பு கொண்ட குல்மால் குருஜி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல வனப்பகுதிகளில் கோவில் கட்டுகிறேன் என்கிற பெயரால் உள்ளே நுழைந்து, அடிக்கடி அங்கே போக வர இருந்து, அந்தப் பகுதியில் உள்ள சிலரைத் தனக்கான ஆளாக மாற்றி, பெரிய மரங்களை யாருக்கும் தெரியாமல் வெட்டிக் கடத்தும் வேலையைச் செய்து வந்தார்.
அவர் சில ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டுக்குள் வந்து இந்த வனப்பகுதியில் உள்ள நல்ல மரங்களைக் கடத்த முயற்சி செய்து வந்தார். அதற்கு உதவியாகவும் காட்டில் மரங்களைக் காட்டிக் கொடுப்பதற்காக அவரோடு கூட்டாளி ஆனவர்கள்தான் மலையாண்டியும், மாசியும்.
இவர்களின் மரக்கடத்தல் திட்டத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு வனத்துறையின் சார்பில் ரகசியமாக ஏற்பாடு செய்து காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட வனத்துறை அதிகாரிதான் நான். என் பெயர் அய்யாத்துரை என்றார் காட்டுவாசி.
நீதிமன்றத்தின் உள்ளே இருந்த வழக்குரைஞர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர் கள், பார்வையாளர்களாக இருந்தவர்கள். செய்தி சேகரிக்க வந்திருந்த ஊடகத்துறையினர் என அனைவரும் வியப்பில் காட்டுவாசியைப் பார்த்தனர்.
“இதுக்கு மேலே நான் சொல்றேன். இதுவரை காட்டுவாசியா இருந்த அய்.எஃப்.எஸ். அதிகாரி அய்யாத்துரை அவர்கள், காட்டையே திருடி நாட்டு வளத்தை நாசம் செய்ய நினைச்ச இந்த மோசக்காரங்களைத் தடுத்து நிறுத்த, பலவகையிலே அரசுக்கு உதவியாய் இருந்திருக்கிறாரு.
தன்னோட சுயநலனைவிட சமூகத்தின் பொதுநலன் பாதிக்கப்படக்கூடாதுங்கிற உயர்ந்த எண்ணத்தோட தன்னை வருத்திக்கிட்டு கவனமா தன் கடமையை சிறப்பாச் செய்திருக்காரு.
அதுமட்டுமில்லே, குழந்தைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கடத்துற முயற்சியில் ஈடுபட்ட அவங்க சூழ்ச்சியை முறியடிச்சு, குழந்தைகள் ரெண்டு பேரையும் காப்பாத்தித் தந்திருக்காரு… நம்ம அய்யாத்துரை அய்.எஃப்.எஸ்.அவர்கள்.
அவர் காட்டுவாசின்னு தன்னைத் தானே சொல்லிக்கிட்டாலும் பொதுநலனுக்குப் பாடுபட்ட இவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. வாசிக்க வேண்டிய கதை இவருடைய கதை.
தமிழ்நாடு அரசு இவ்வளவு சிறப்பாய்ச் செயல்பட்ட அய்யாத்துரை அவர்களின் கடமை உணர்வைப் பாராட்டிப் பரிசு தரணும்னு இந்த நீதிமன்றம் அரசைக் கேட்டுக்கொள்கிறது.
அதே நேரத்தில் கடைசி வரை தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாதபடி சட்டத்தின் முன் நிறுத்தியதற்காக அய்யாத்துரை அவர்களை இந்த நீதிமன்றம் பாராட்டி தன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது” என்றார் நீதிபதி.
காட்டுவாசி வேடத்திலிருந்த அய்யாத்துரை அவர்கள் மெதுவாக நீதிபதியிடம் ஏதோ கேட்டார். நீதிபதியும் சரி என்பது போல் தலையை ஆட்டினார்.
வேகவேகமாக வெளியில் சென்றார் காட்டுவாசி வேடத்தில் இருந்த அய்யாத்துரை.
“இந்த வழக்கில் கடத்தப்பட்ட குழந்தைகளான அமுதா, மாணிக்கம் இருவரும் காட்டுக்குள் ஓடாமல் இருந்திருந்தால் தவறு தொடர்ந்திருக்கும் என்பதே உண்மை. அதைவிட முக்கியமாக இந்த வழக்குக்கு அவர்கள் இருவரும் சொன்ன தகவல்கள் முக்கியமானவை. குழந்தைகள் மக்கள் தொகையில் நூற்றுக்கு நாற்பது பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த உலகில் வாழ முழு உரிமையும் உண்டு. ஆனாலும் பதினெட்டு வயதுவரை அவர்களுக்கானதை அவர்களே முடிவெடுக்க முடியாத சூழலில் இருப்பதால், சமூகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவரும் குழந்தைகளைக் கவனமாக கல்வியிலும், தாங்கள் விரும்பும் நல்ல செயல்பாடுகளிலும் பங்கேற்க வைத்து வழிகாட்ட வேண்டுமென இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது” என்று நீதிபதி சொல்லி முடித்ததும். அமுதா தன் அப்பாவையும், மாணிக்கம் தன் அம்மாவையும் நிமிர்ந்து பார்த்தனர்.
காட்டுவாசி நின்றிருந்த கூண்டுக்கு இப்போது காக்கி உடையோடு, தலையில் காக்கித் தொப்பியோடு அதே கம்பீரத்தோடு அய்யாத்துரை அய்.எஃப்.எஸ். வந்து நின்று நீதிபதியைப் பார்த்து சல்யூட் அடித்தார். நீதிபதி அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் வைத்தார்.
அமுதாவும், மாணிக்கமும் தங்கள் இருக்கையிலிருந்து ஓடிச் சென்று கூண்டிலிருந்த அய்யாத்துரை அவர்களின் இருபுறமும் நின்று அவர் கைகளைப் பிடித்துக்கொண்டனர்.
நீதிபதியின் பின்புறம் இருந்த தமிழ்நாடு அரசு இலச்சினையின் கீழ் இருந்த தமிழ்ச் சொல்லை மூவரும் பார்த்துக்கொண்டே நின்றனர்.
அது, “வாய்மையே வெல்லும்”!
(தொடர் முடிவுற்றது)
