கதை கேளு கதை கேளு
| க |
ண் தெரிகின்றதா?” என்று கேட்டது காவலாளிப் பூனை. இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்த எனது கண்களையும் கட்டிவிட்டுத் தெரிகின்றதா எனக் கேட்கின்றதே எனச் சலித்துக்கொண்டது சர்மர். சர்மர் ஒரு நரி. தான் அந்தக் குற்றத்தைச் செய்யவே இல்லை என நீதிமன்றத்தில் வாதிட்டது. கீழ் நீதிமன்றத்தில் அதற்குச் சிறைவாசம் எனத் தீர்ப்பு எழுதிவிட்டனர். மேல் நீதிமன்றத்தில் அரசர் விசாரிப்பார். ஆனால், அங்கே போவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. இந்தச் சிறைச்சாலையில் ஒரு விநோதப் பழக்கம் உண்டு. அறையில் அடைத்து வைத்துக் கண்களையும் கட்டிவிடுவார்கள்.
நரியின் பக்கத்து அறையில் ஒரு குதிரை கைதியாக இருந்தது. அது ஓயாமல் அழுதுகொண்டே இருந்தது. அதன் கண்களும் மூடப்பட்டு இருந்தன.
“ஏன் அழுதுக்கிட்டே இருக்கீங்க? நீங்க யாரு?” என்று கேட்டது சர்மர்.
கண்களை உருட்டிப் பார்த்த காவலாளிப் பூனை “உஷ்…” என்றது. பேசக் கூடாதாம். இரண்டு பூனைகள் அந்த அறைகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டன. அவை குறுக்கும் நெடுக்கும் நடந்த வண்ணமாய் இருந்தன. இரண்டும் தூரத்தில் நடக்கும்போதுதான் பக்கத்தில் இருப்பதோடு பேச முடியும்.
“என் பேரு உப்லு. ஒரு குதிரை. நான் செய்யாத குற்றத்திற்கு என்னைச் சிறையில் அடைத்துக் கண்ணைக் கட்டிவிட்டார்கள்” என்றது.
“மேல் முறையீடு செய்து விளக்கினாயா? அரசர் தீர விசாரிப்பார்னு சொன்னாங்களே என்றது” சர்மர்.
”க்கும்… என்னத்த விசாரிப்பார்?” என்று சலித்துக்கொண்டது. இடையில் பூனைகள் கடக்கும்போது அமைதி காத்தன. பூனைகள் சத்தம் போடாமல்தான் நடந்தன. ஆனால், கைகளில் நீண்ட குச்சி சத்தம் எழுப்பியது. பூனைகள் நடப்பதைக் கேட்கமுடியுமா என்ன?
“சர்மர், நம் இருவருக்கும் அநீதி நடந்துள்ளது. நாம் இங்கிருந்து தப்பித்துச் செல்வோமா?” என்ற குண்டை உப்லு குதிரை போட்டது. “மாட்டேன். நான் போராடுவேன்” என்றது சர்மர். நாள் முழுக்க நரியும் குதிரையும் பேசிக்கொண்டன. சர்மர் தன் கதையைச் சொன்னது. தான் ஒரு கணித ஆசிரியர் என்றும், ஊரெல்லாம் சென்று கணிதம் சொல்லித் தருவதாகவும் சொன்னது. “நீங்க கணித ஆசிரியரா? எங்கே நான் என்ன மாதிரியான அறையில் இருக்கின்றேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்றது உப்லு. முன்னாலும் பின்னாலும் போகச் சொன்னது. இடிக்கின்றதா? வாலினை ஆட்டுங்கள், உங்கள் வயது என்ன? உயரம் என்ன? என்றெல்லாம் கேட்டுக்கொண்டது சர்மர்.
“நீங்கள் இருப்பது ஓர் உருண்டை வடிவச் சிறைச்சாலை. பந்துக்குள் அடைத்துள்ளனர். உங்கள் குரலின் எதிரொலி, உயரம் எல்லாம் வைத்துச் சொல்கின்றேன், நிச்சயம் உருண்டைதான்” என்றது நரி.
“அட, பலே ஆளுதான்! ஆனால், என் கண்ணைக் கட்டி கயிற்றால் இழுத்து வந்து தள்ளிவிட்டனர் காவலாளிகள்” என்று வருத்தமாகக் கூறியது குதிரை.
இருவர் சிறை அறைகளிலும் ஒரு சின்னச் சன்னல் இருந்தது. ஆனால், என்ன பயன்? வெளியே பார்க்க முடியாது. நேரத்திற்கு உணவு வந்தது. கம்பிகளுக்கு வெளியே இருந்து பூனைகள் வைத்தன. எங்கே உணவு இருக்கு என்று கூறின.
“பாருங்க உப்லு, இந்தச் சிறைச்சாலையை எப்படி வடிவமைத்து இருக்காங்க? குற்றவாளிகள் செய்த தவறுக்காக வருத்துவது போல வடிவமைப்பு இருக்கின்றது. உணவு அருமையாக இருக்கு. ஏன் கண்ணைக் கட்டி வைச்சிருக்காங்கன்னுதான் புரியவில்லை” – இடையில் பேசியது சர்மர்.
”உஷ்” என்ற மிரட்டல். உங்கள் காதுகளுக்கு அது ‘மியாவ்’ என்று கேட்கலாம்.
பூனைகள் மதிய உணவுக்குச் (பால் குடிக்கச்) சென்ற போது நரியும் குதிரையும் மீண்டும் பேச்சைத் துவங்கின.
“என்ன சர்மர், உங்களுக்கு யார் மீதாவது அதிகமான கோபம் உள்ளதா?”
“இருக்கின்றது. எப்போதோ எங்களைப் பற்றித் தவறாக எழுதிய சிறார் எழுத்தாளர்கள் மீது எல்லாம் கோபம் உள்ளது. விலங்குகளான எங்களுக்கு எப்போதும் தந்திரத்தனம் கிடையாது. நாங்கள் எல்லாம் ஏதோ எப்போதும் தந்திர எண்ணத்தோடு அலைவது போலக் கதைகளில் சித்திரிக்கப்படுகின்றோம். உண்மையில் அப்படி எங்களுக்கு அந்தக் குணமே இல்லை. இப்போதும் மாணவ விலங்குகளிடம் அந்த எண்ணம் உள்ளது. அது உண்மை அல்ல”
“பூனை வருகின்றது… அமைதி” என்றது சர்மர். இன்று பூனைகள் அந்தக் குச்சியைக் கையில் வைத்திருக்கவில்லை. ஆனாலும் எப்படி சர்மர் கண்டுபிடித்தது என்று உப்லுவிற்கு ஆச்சர்யம். இந்தப் பூனைகளின் வேகத்தையும் நேரத்தையும் வைத்து இந்தச் சிறைச்சாலை வரிசையின் தூரம் நூறு மீட்டர் இருக்க வேண்டும். நம் அறைகளைப் போலச் சுமார் 40 அறைகள் இருக்க வேண்டும். உப்லு பூனையிடமே கேட்டது. பூனையும் ஆணித்தரமாக ‘ஆமாம்’ என்று உறுதி செய்தது. உப்லுவிற்கு பயங்கர ஆச்சர்யம். “நீங்க நம்ம நாட்டின் பள்ளிகளில் ஆசிரியராகப் போகவேண்டும் சர்மர்” என்று கேட்டுக் கொண்டது உப்லு.
“முதலில் அரசரைச் சந்தித்து நான் குற்றவாளி இல்லை என்பதை விளக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றேன்.” நடந்தவற்றை எல்லாம் விளக்கியது. ஆதாரமாக இருப்பவற்றையும் உப்லுவிடம் கூறியது. “குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டால் கணித ஆசிரியருக்கு விண்ணப்பிப்பேன்” என்றது சர்மர் நரி.
மீண்டும் தப்பித்துப் போகும் எண்ணத்தைக் குதிரை உப்லு கூறியதை மறுத்தது சர்மர்.
மறுநாள் காலையில் “உப்லு.. உப்லு..” என்று அழைத்தது. பதில் இல்லை. “உப்லு… உப்லு… நண்பா…” என்று அழுகுரலில் அழைத்தது. பதிலில்லை. பூனையிடம் விசாரித்த போது பதில் எதுவும் வரவில்லை. “கொல்லப்பட்டுவிட்டதா? அதற்குத்தான் தப்பித்துப் போகலாம் என்றதா?” எனக் கலங்கியது சர்மர்.
‘டாம் டாம் டாம்‘, எனச் சத்தம். சர்மரின் கண்களில் இருந்த துணி அவிழ்க்கப்பட்டது. எதிரே ஒரு கருப்பு முயல் நின்று கொண்டு இருந்தது. அடுத்த கட்ட விசாரணையா? உச்சபட்சத் தண்டனையா? அல்லது விசாரிக்காமல் தண்டனையா? என்று எல்லாம் யோசித்தது.
கருப்பு முயலோ ஒரு தாளினை நீட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறியது. அது ஒரு கடிதம்.
“அன்புள்ள சர்மர்,
விசாரணை முடிந்தது. நீங்கள் குற்றவாளி அல்ல என உறுதிப்படுத்தப்பட்டது. மன்னிக்கவும்.
நீங்கள் நம் நாட்டின் வடகிழக்குத் தோட்டப் பள்ளியில் கணித ஆசிரியராக நியமிக்கப்படுகின்றீர். நேராக அங்கே சென்று பணிக்குச் சேரலாம்.
இப்படிக்கு,
அரசர்
பின்குறிப்பு : உங்க அன்பு நண்பர் உப்லு நான் தான்.
பின்குறிப்பு : சிறார் எழுத்தாளர்கள் அனைவரிடமும் நரி நல்ல விலங்கு என்று கதை எழுதச் சொல்லி ஆணையிட்டுள்ளேன். சிறார் எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் செவிசாய்ப்பார்கள்.”
சிறு புன்னகையுடன் தோட்டப் பள்ளியை நோக்கி ஓடியது சர்மர்.<