துணுக்குச்சீட்டு-29
| மு |
தலாம் வகுப்புல இருந்து இப்போது அய்ந்தாம் வகுப்பு வரை ஒரு நாளும் விடுப்பு எடுக்காத நெடுமாறன், இன்னிக்கு பள்ளிக்கு வரவில்லை. (இது துணுக்குச் சீட்டு தான், சிறுகதைப் பகுதி இல்ல. இந்தப் பகுதியில கட்டாயம் அறிவியல் இருக்கு! அதனால, மேல படிங்க பாஸ்) மூன்று ஆண்டுகளாக, அவனுக்குத் தமிழ்ப் பாடம் எடுக்கும் மணியன் அய்யாவுக்கு நெடுமாறன் விடுப்பு எடுத்தது புதிதாக இருந்தது. “என்னது, மாறன் இன்னிக்கு வரலையா? அத்தி பூத்தாற் போல இருக்கே” என்று சொல்லிகிட்டே வகுப்பைத் தொடங்கினார். வகுப்பைக் கவனிச்சாலும், இதழினிக்கு, அத்தி பூத்தாற் போல எனும் சொலவடையின் அர்த்தம் என்னவா இருக்கும்ன்னு தலைக்குள்ளே ஓடிக்கிட்டே இருந்துச்சு. வகுப்பு எப்போ முடியும், அய்யாகிட்ட எப்போ இதைப் பற்றிக் கேட்குறதுன்னு காத்துக்கிட்டே இருந்தாள் இதழினி.
வகுப்பு முடியவும், இதழினி இந்தக் கேள்வியைக் கேட்கவும், அடுத்த வகுப்புக்கு நேரமாகவும், அவளோட அறிவியல் ஆசிரியை வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. நேரம் ஆனதால, “அத்தி மரத்தில் பூக்களே இருக்காது, ஆனால், காய் காய்த்து, பழமாகும். ஆக, நடக்கவே நடக்காத காரியத்தைத் தான் அத்தி பூத்தாற் போல என்று சொல்லுவோம்”ன்னு வேக வேகமா முடிச்சாரு அய்யா. இதைக் கேட்ட இதழினிக்கு இன்னும் சந்தேகங்கள் குறையவில்லை. “அது எப்படி அய்யா, பூ இல்லாமல் காய் வரும்?” என்று கேட்க, அறிவியல் ஆசிரியை, “அதுக்கு நான் பதில் சொல்கிறேன். வா, வகுப்புக்கு நேரமாச்சு”ன்னு கூட்டிகிட்டுப் போய்ட்டாங்க.
இதழினி கேட்ட கேள்வியேதான் உங்களுக்கும் இருக்கு? அத்திப் பூ இல்லாம எப்படி அத்திப்பழம் வருது?
ஓர் உண்மையைச் சொல்லவா? அத்தி மரத்துல பூக்கள் பூக்கும் அதை நீங்களும் நானும் பார்த்து இருக்கோம். (அத்தி மரத்தை நேரில் பார்த்து இருந்தால்! அப்படி இல்லாட்டி, படத்துல பாருங்க..)
சரி, சொல்லுங்க, விழாக்களில் இருக்கும் பூங்கொத்து பார்த்து இருக்கீங்களா? அதுல அழகா மலர்களை நமக்கு வேண்டிய மாதிரி அடுக்கிக் கட்டி இருப்பாங்க அல்லவா? அது போல, செடியிலோ மரத்திலோ, ஒரு குறிப்பிட்ட முறையில் மலர்கள் தோன்றுவதை பூந்துணர் (inflorescence) என்று சொல்லுவோம். மகரந்தச் சேர்க்கைக்கு, பூந்துணர்கள் பெரிதும் உதவி செய்யுது. பூந்துணர்களில் பல வகைகள் இருக்கு.
சாலை ஓரங்களில் குல்மோகர் மரம் பார்த்து இருக்கீங்களா? அந்த மரத்தில் பூக்கும் பூக்களை, நல்லா கவனிச்சா, பூக்கள் கொத்துக் கொத்தா மலர்ந்து இருக்கும். அதோட, ஒரு கொத்தில், அடியில மலர்கள் இருக்கும், நுனியில் மொட்டுகள் இருக்கும். இப்படி, முதிர்ந்த மலர்கள் கொத்தின் அடியிலும் இளம் மலர்கள் பூங்கொத்தின் நுனியிலேயும் இருந்தால், அதை ரேஸ்மோஸ் பூந்துணர் (Racemose inflorescence) என்று சொல்லுவாங்க.
இதுவே, மல்லிகைப் புதர்களை எடுத்துக்கிட்டா, ஒரு மல்லிகைக் கொத்தில, மலர், கொத்தின் நுனியிலேயும், மொட்டு, கொத்தின் அடியிலேயும் இருக்கும். இந்தமாதிரி இருக்கும் பூந்துணரின் பெயர், cymose inflorescence. இந்த மாதிரி, பல வகை பூந்துணர்கள் இருக்கு.
அப்போ, நம்ம அத்திப் பழத்தின் பூக்கள், எந்த வகை பூந்துணர்? அத்திப் பூக்கள், hypanthodium inflorescence பூந்துணர் வகையைச் சார்ந்தது. இந்த வகை, cymose inflorescence வகைப் பூந்துணரின் கீழ் வரும். அதெலாம் இருக்கட்டும், பூக்கள் எங்கே?
பொறுங்க பொறுங்க, சொல்றேன். உண்மையாலுமே, நாம சாப்பிடும் அத்திப் பழத்துக்கு உள்ளே தான் அத்திப் பூக்கள் இருக்கு. ஆமாங்க, நம்புங்க.
ஒரு பூந்துணரை எடுத்துகிட்டா, அதுல முழுப் பூங்கொத்தையும் தாங்கும் தண்டு இருக்கும் இதை, பூந்துணர்த் தண்டு (peduncle) என்று சொல்லுவோம். இந்தப் பூந்துணர்த் தண்டில் இருந்து கிளைத்துதான் பூக்கள் வரும். அப்படி இருக்கும் பூக்களின் தண்டினை மலர்க்காம்பு என்று சொல்லுவோம்.
Hypanthodium பூந்துணரில், பூந்துணர்த் தண்டு ஒரு மூடிபோட்டு இருக்காமல் மூடிய கோப்பையைப் போல இருக்கும். அந்தக் கோப்பைக்குள்ளே மலர்கள் கிளைத்து வரும். அத்தி மரத்துல இருக்கும் பச்சை நிறக் காய்கள், முதலில், பூந்துணர்த் தண்டாக இருக்கும், அதுக்கு அப்புறம், கொஞ்ச நாட்கள் கழித்து, காயாக மாறி, பின்னர், பழமா மாறுதாம். ஆமா, அத்திப் பழத்தை உடைத்தால் உள்ளே இருக்கும் விதைகள் எல்லாம், ஒரு காலத்தில பூவாக இருந்தவை தான். இப்போ, இந்த அறிவியல் புரிஞ்சிடுச்சா உங்களுக்கு? அப்போ, இனிமே யாராச்சும் அத்தி பூத்தாற் போல என்று சொன்னாங்கன்னா, அவங்க கிட்ட போய், உண்மையிலேயே அத்தி மரத்துல பூ பூக்கும், அதை நீங்க பார்த்து இருக்கீங்கன்னு சொல்லி, அதோட நிறுத்தாம, இந்த அறிவியலையும் சொல்லி அசத்துங்க!<