இரு உள்ளங்கள்- விழியன்
என்ன…?” என்ற குரல் அந்தக் குகையை அதிர வைத்தது. அறிவியல் ஆய்வுகள் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் மாசாணி குரங்கு அந்தக் குகையில் வசிக்கின்றது. ஜேம்ஸ்பாண்டுக்குக் கருவிகள் செய்து தரும் ‘க்யூ’ போலத் தன்னைக் காட்டிக் கொள்ளும். இசா குரங்கு ஒரு பொருளைக் கேட்ட பின்பு தான் மாசாணி குரங்கு இப்படிச் சத்தமிட்டது. அதற்கு ஒருமுறை ‘24’ படத்தில் சூர்யா கட்டியிருக்கும் கடிகாரம் கிடைத்தது. அதைத்தான் இப்போது இசா கேட்டது. அதனால் தான் மாசாணி அதிர்ச்சி அடைந்தது.
‘அந்தக் கடிகாரம் வேண்டும், அதைச் சொடுக்கியவுடன் உலகம் உறைந்துவிட வேண்டும்’ என்றும், ‘குரங்குகள் மட்டும் உறைந்துவிடக்கூடாது’ என்றும், ‘மொத்தம் 11 விநாடிகள் போதும்’ என்றும் இசா கேட்டிருந்தது.
“என்ன இது விநோதமாக இருக்கின்றதே?” என்று மாசாணி கேட்டது. அதற்கு இசா கொடுத்த விளக்கம் திருப்தியாக இருந்தது. இசா கேட்டபடி அந்தக் கடிகாரத்தைத் திருத்திக் கொடுத்தது. ஆனால், கூடவே ஓர் எச்சரிக்கையும் கொடுத்தது. “இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உன் வாழ்நாளின் ஒவ்வொரு நாளாகக் குறையும். உன் வாழ்க்கை 5 ஆண்டுகள் எனில், 365 முறை பயன்படுத்தினால் உன் வாழ்க்கை
4 ஆண்டுகளுடன் முடிந்துவிடும்” என்றது.
இசா தன் ஊருக்கு வந்துவிட்டது. மனதிற்குள் மாசாணி சொன்னது நினைவு வந்தது. அது சொன்னபடி காலத்தை உறைய வைக்கும் கடிகாரத்தின் பொத்தான்களை மேலே இரண்டு, கீழே ஒன்று, பக்கத்துக்கு மூன்றாகத் திருக வேண்டும். இதைச் செய்தால் 11 விநாடிகள் உலகம் உறைந்துவிடுமா? ஆனால், இது நடக்குமா? என்று பரிசோதித்துப் பார்த்தாலும் தன் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்துவிடும். ‘பரவாயில்லை’ என்று ஒரு முறை பரிசோதனை செய்தது. ‘அட! உலகமே உறைந்துவிட்டது!’ தூரத்தில் ஒரு குரங்கு மட்டும் மரத்தில் தாவியது. என்ன நடக்கின்றது என அந்தக் குரங்கிற்குப் புரியவே இல்லை. 11ஆம் நொடியில் எல்லாம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டன.
மறுநாள் காலையில் தன் கூட்டத்தின் சுமார் இருபது குரங்குகளையும் ஒன்றாக அழைத்தது. அனைத்தும் சாலையின் ஓரத்தில் நின்றன. இசா கடிகாரத்தைத் திருகியது. சாலையில் எல்லா வாகனங்களும் உறைந்தன. கார், லாரி, ஸ்கூட்டர், பேருந்து என எல்லாம் உறைந்துபோய்விட்டன. “போங்க! போங்க!” எனக் கத்தியது இசா. எல்லாக் குரங்குகளும் அந்த நெரிசலான நெடுஞ்சாலையைக் கடந்தன.
“இசா, இது அருமையா இருக்கு! திரும்பவும் அந்தப் பக்கம் போய் இந்தப் பக்கம் வரலாமா?” எல்லோரும் கேட்கவே, தன் இரண்டு வாழ்நாள்களை இவர்களுக்காகத் தியாகம் செய்தது.
“நம்ம இசா கலக்குது!” என எல்லோரும் மகிழ்ந்தனர்.
* * *
வகுப்பறை மேடை மேலே ஏறவே அரவிந்துக்குப் பயம். ஆனால், அன்று கணக்கு ஆசிரியர் வெளியே சென்றதும் ஏறிவிட்டான். எல்லோருக்கும் ஆச்சரியம். “டேய், அரவிந்த்தா அது?” என்று கேட்டேவிட்டனர்.
“நண்பர்களே, எனக்கு உடனடியா 500 ரூபாய் தேவைப்படுது. ஏன் எதுக்குன்னு அப்புறம் சொல்றேன். தவறா எதுக்கும் இல்லை. எனக்குக் கிடைச்சதும் திருப்பித் தரேன்” என்றான். 500 ரூபாய்க்கு எங்கே போவது? அதுவும் அது ஏழாம் வகுப்புதான். அவனது நேர்மை தெரிந்த மாணவர்கள் சிறிது சிறிதாகப் பணம் சேர்த்தனர். ரூ. 450 வரை சேர்ந்தது.
“டேய், எதுக்குடா இவ்ளோ காசு?”
“கயிறு வாங்க”
“கயிறா? அதெல்லாம் கட்டக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல”
“இது அந்தக் கயிறு இல்லை. நீட்டுக் கயிறு. 100 அடி வேணும்”
“என்னது, 100 அடியா?”
எதுக்கு இவனுக்கு 100 அடி நீளக்கயிறு? கிணற்றில் விடப்போறானா? கயிறு இழுக்கும் போட்டிக்கு இருக்குமோ? 100 அடின்னா எவ்ளோ பெருசுன்னாச்சும் தெரியுமா இவனுக்கு?
தோழி இனாராவுடன் அரவிந்த் கடைக்குச் சென்றான். ஏற்கனவே விலை விசாரித்திருந்தான். ரூ.50 குறைந்திருந்தது. கடைக்காரரிடம் “மிச்சத்தை ஒரு வாரத்தில் தருகிறேன்” என்று சொல்லிக் கேட்டான். கடைக்காரர் தயங்கினார். இனாரா சமாதானமாகப் பேச, வாங்கி விட்டார்கள்.
“சொல்லுடா, கயிறு எதுக்கு?”
“வா, நீயும் என்கூட வரணும்”
அவர்கள் மரம் ஏறும் தொழிலாளரைச் சந்தித்தனர்.
“ஓர் இடத்தில் கயிறு கட்டணும். பணம் இப்போது இல்லை. கிடைத்தவுடனே தருகிறேன்.”
அப்போது அரவிந்த் உண்மையைக் கூறினான்.
“ஒரு வாரம் முன்னாடி அக்காகூட வண்டியில போனேன். ‘சூச்சூ’ வருதுன்னு இறங்கினேன். அக்கா, யூ டர்ன் அடிச்சிட்டு வரேன்; நீ ரோடு தாண்டி வான்னு சொல்லுச்சு. சூச்சூ அடிச்சேன். ‘பை பாஸ்’ சாலைங்கிறதால ரோடு தாண்ட கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஒரு குரங்கு அப்ப அங்க வந்துச்சு. என் கையைப் பிடிச்சு எதிர் முனை வரைக்கும் கொண்டு போய் விட்டுச்சு. எனக்கு ரொம்ப அதிசயமா இருந்துச்சு – நம்மளோட பயம் எப்படி அதுக்குத் தெரியுதுன்னு. ஆனால், என்னை விட்டுட்டுத் திரும்பிப் போகும்போது ஒரு கார் வந்து மோதிடுச்சு.”
அரவிந்தின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
“அங்கேயே உடனே குரங்கின் உயிர் போயிடுச்சு. அங்க பத்து இருபது குரங்குகள் உடனே கூடிடுச்சு. ஆனால், செத்துப்போன குரங்குகிட்ட யாராலும் போக முடியல. சர் சர்ன்னு வண்டிங்க. ஒருவேளை குரங்குங்க ரெண்டு பக்கமும் வாழுதுன்னு நெனக்கிறேன். அதோட இடத்தில நெடுஞ்சாலை போட்டிருக்கணும். தினமும் அது ரோட்டைக் கடக்கச் சிரமப்படுதுன்னு தோனுச்சு. ஒரு இடத்துல ரெண்டு பக்கமும் உயரமான மரம் இருக்கு. ரெண்டு மரத்துக்கும் கயிறு கட்டிட்டா தொங்கிட்டே அது ரோட்டைக் கடந்திடும் இல்ல”
அண்ணனுக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. “சரிடா. நானே ரெண்டு பக்கமும் என் நண்பர்களை வெச்சுக் கட்டிடறேன். ஆனால், அதுக்குப் பதில் நீ எனக்கு ஒன்னு செய்யணும். ஒழுங்கா படி! சரியா?” என்றார். இந்த செய்தி அறிந்ததும் கடைக்காரரும், “அட, இதுக்குன்னா காசு வாங்கி இருக்கமாட்டேனே” என்றார்.
இரவு, வாகனங்கள் குறைவான நேரத்தில் கயிறு கட்டப்பட்டது. நெடுஞ்சாலை 60 அடி இருந்ததால், தொங்கும் இடங்களுக்காக 100 அடி கயிறு தேவையாக இருந்தது.
அரவிந்தும் இனாராவும் கயிற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். இதைக் கவனித்துக் கொண்டிருந்த இசா குரங்கிற்குக் கயிற்றின் நோக்கம் பளிச் சென்று புரிந்தது. அரவிந்தையும் நினைவில் வைத்திருந்தது. தன்னுடைய நெருக்கமான நண்பரான குரங்கு அடிபட்ட போது அரவிந்த் அழுதது இசாவுக்கு நினைவில் இருந்தது. இந்தச் சாலையை எப்படிக் கடப்பது என்று, கட்டப்பட்டிருந்த கயிற்றில் இசாவே செய்து காட்டியது. இசாவை எல்லா குரங்குகளும் பின் தொடர்ந்தன. இது பாதுகாப்பாகவும் இருந்தது.
அந்தக் காட்சியைக் கண்டதும் அரவிந்துக்கு மிகவும் நிறைவாக இருந்தது. ‘எவ்வளவு எளிதான தீர்வை மனிதர்கள் செய்து கொடுத்துவிட்டார்கள். அடடே!’ என்று வியந்தது இசா.
இனி கடிகாரத்தைப் பயன்படுத்தத் தேவை இருக்காது என நினைத்த இசா, கடைசியாக ஒரு முறை கடிகாரத்தைப் பயன்படுத்தியது.
மேலே ரெண்டு, கீழே ஒன்று, பக்கத்துக்கு மூன்று என்று திருகியது.
11 விநாடிகளில் அரவிந்தின் கழுத்தினைக் கட்டியணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு வந்தது ‘இசா’!.<