நலமான உடலில் வளமான அறிவு
| க |
ுழந்தை பிறந்தது முதல் பள்ளிப்படிப்பை முடிக்கின்ற வரை அவர்கள் வாழ்வை, பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர்கள் தீர்மானிக்கின்றார்கள். இவர்களின் வாழ்வியல் முறை – குழந்தைகளைப் பெருமளவு் பாதிக்கிறது.
உண்ணுதல், உறங்குதல், பழகுதல் என்று பலவற்றிலும் இவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளை வளர்த்தெடுக்கின்றன. குழந்தைகளின் செயல்பாடுகள் இவர்களின் இயல்புகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
உடல் நலம் என்று எடுத்துக்கொண்டால், குழந்தையின் நலம் இவர்களால் தான் பெரிதும் அமைகின்றது.
குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம் இரண்டும் மற்றவர்களாலே தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தாராலும், சுற்றியுள்ளவர்களாலும், பள்ளிச் சூழலாலும் தீர்மானிக்கப்படுகிறது.
அறிவும், சிந்தனையும் குடும்பத்தாரால் பெருமளவு அமைகிறது. கடவுளை ஏற்பதா? மறுப்பதா? எந்த மதத்தைப் பின்பற்றுவது? தாவர உணவா? தாவர உணவு, ஊன் உணவு – இரண்டுமா? என்பதைப் பெரும்பாலும் குடும்பத்தவரே தீர்மானிக்கின்றனர்.
பெற்றோர் வணங்கும் கடவுளும், மதமும் பிள்ளைக்கும் உரியதாகின்றன. பெற்றோர் உண்ணும் உணவுகள் பிள்ளைக்கும் உரியதாகின்றன.
அதேபோல் பள்ளிச் சூழல், ஆசிரியர்களின் இயல்பு, உடன் பயிலும் மாணவர்களின் செயல்பாடுகள் பிள்ளைகளைப் பெரிதும் தீர்மானிக்கின்றன.
உடல் நலமும், வளமும் பெரிதும் குடும்பச் சூழலால் அமைகின்றன. இதைச் சரிசெய்து எல்லாப் பிள்ளைகளுக்கும் நல்ல உணவு கிடைக்க, உடல் நலம் அமைய திராவிட மாடல் அரசு ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் அரசுத் திட்டத்தால் உடல் நலம் பெறுகின்றனர்.
கல்வி என்பது ஏட்டுப் படிப்பு மட்டுமல்ல; கலை, பண்பாடு, உடற்பயிற்சி, ஆளுமைப் பயிற்சி போன்ற பல வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கியது. ஆனால், இந்த இலக்கை உண்மையை பெரும்பாலான பெற்றோரும், பள்ளி நிருவாகிகளும் உணர்வதில்லை; சிந்திப்பதில்லை.
மதிப்பெண் மட்டுமே நோக்கமா?
பிள்ளைக்கு மூன்று வயது ஆகிவிட்டாலே, படிப்பு படிப்பு என்றும், மதிப்பெண், முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றும் அந்தப் பிஞ்சுப் பிள்ளையைக் கசக்கிப்பிழிவது ஒரு வகையில் வன்கொடுமை ஆகும்.
எட்டாம் வகுப்பு வரை பிள்ளைகள் விளையாட்டாக, மன அழுத்தமின்றி, பாடச் சுமையின்றி கற்க வேண்டும். மொழி, அறிவியல், கணிதம், சமூகம் சார்ந்த அடிப்படைகளை மட்டும் அவர்களுக்குக் கற்பித்துவிட்டால் போதும்; அந்தப் பிள்ளை எந்த வகுப்புப் பாடத்தையும் கற்றுத் தெளியும் தகுதி பெற்றுவிடும்.
ஒரு குழந்தை மூன்றாம் வகுப்பு வரை திறமையாகக் கற்பிக்கும் வாய்ப்பில்லாத ஒரு பள்ளியில் படித்தது. அக்குழந்தையை ஒரு தரமான பள்ளியில் சேர்க்க முடிவு செய்தபோது, மீண்டும் மூன்றாம் வகுப்பிலேயே சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர்.
அதை அறிந்த நான், அம் முடிவை மாற்றி, நான்காம் வகுப்பிலே சேர்க்கச் செய்தேன். நான்காம் வகுப்புப் படிக்கும் பிள்ளைக்கு தமிழ், ஆங்கிலம் படிக்கவும், கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற அடிப்படைகளும், அறிவியலில் சில அடிப்படைச் செய்திகளையும் கற்பித்துவிட்டால் அப் பிள்ளை எளிதாக நான்காம் வகுப்புப் பாடங்களைப் படித்துவிடும். அப் பள்ளியில் கீழ் வகுப்பில் சரியான அடிப்படையில்லாத பிள்ளைகளுக்கு, மாலையில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தி, கீழ் வகுப்பில் கற்கத் தவறியவற்றைக் கற்பித்தனர். மூன்று மாதம் கழித்து நன்றாகப் படிக்கும் பிள்ளைகளைப் போலவே படிப்பில் பின்தங்கியிருந்த பிள்ளைகளும் படித்தனர். நான்காம் வகுப்பு இறுதித் தேர்வில் மற்ற பிள்ளைகளைப் போலவே இவர்களும் நன்கு படித்துத் தேறினர்.
தற்போது அப்பிள்ளை ஏழாம் வகுப்பு படிக்கிறது. வகுப்பிலே முதல் அல்லது இரண்டாம் தகுதி பெறுகிறது. மீண்டும் மூன்றாம் வகுப்பிலே சேர்க்க நினைத்த பெற்றோர் நான் கூறியதன் உண்மையை நன்கு புரிந்து கொண்டனர்.
எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சியளித்து அடிப்படையானவற்றை மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டால் அதன்பின் மேல் வகுப்புகளில் பிள்ளைகள் சிறப்பாகச் சாதிப்பர். எட்டாம் வகுப்பு வரை எல்லோருக்கும் தேர்ச்சியளிக்கும் திட்டப்படி படித்த பிள்ளைகள், 10 ஆம் வகுப்பு பொதுத் தேல்வில் 95% தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற நடைமுறை உண்மை இதைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
எனவே, பிள்ளைகளைக் கசக்கிப் பிழியாமல், மன இறுக்கத்தை உருவாக்காமல், எளிமையாகக் கல்வி கற்கச் செய்வதே சிறந்த முறையாகும். பிற்காலத்தில் அறிவியல் அறிஞராக மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாகச் சாதித்த பலரும் பள்ளிப்படிப்பில் சராசரி மாணவர்கள்தாம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் மீது திணித்தல் கூடாது
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் போதே அப் பிள்ளை மருத்துவராக ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது தப்பு. அது 10 ஆம் வகுப்புவரை நன்கு படித்தபின் அதன் விருப்பம், திறமை இவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப, மருத்துவப் படிப்பா? பொறியியல் படிப்பா? வணிகப் படிப்பா, மொழிப் படிப்பா? வேறு என்ன படிப்பு என்பதைத் தீர்மானித்து, பிள்ளையின் விருப்பத்திற்கு முன்னுரிமையளித்து உயர்கல்வி அளிக்க வேண்டும்.
உடல் நலமும் உள்ள நலமும்
பாட அறிவும், அதிக மதிப்பெண்ணும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது. அக் குழந்தையின் உடல் நலம், உள்ள நலம், ஆளுமைத் திறன், தனித் திறமைகள், பொது அறிவு போன்றவை தாம் வளமான எதிர்காலத்தை அக்குழந்தைக்குத் தரும்.
தொடக்கப் பள்ளி முதலே பிள்ளைகளை ஒரு மணி நேரமாவது மாலை வேளைகளில் மனம் மகிழ ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடச் செய்ய வேண்டும். இரசாயனங்கள் அற்ற நல்ல இயற்கை உணவுகளை அளிக்க வேண்டும். நல்ல வலுவான, நலமான உடலில் தான் கூர்மையான அறிவு மிளிரும், ஆற்றல் வெளிப்படும். சாதிக்க உடல் ஆற்றல் முக்கியம். நலமான, வலுவான உடலே அறிவும் திறமையும் மிளிர அடிப்படையானது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.<
