அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
| ப |
றவைகளை நோக்குதல் (Bird watching) என்றால் பறவைகளைப் பார்ப்பது அல்லது பறவைகளைக் கவனிப்பது! இது ஒரு பொழுதுபோக்கு இயற்கை சார்ந்த ஆர்வம். பறவைகளை நோக்குதலை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று, பறவைகள் வசிக்குமிடங்களுக்கே சென்று அவற்றின் செயல்களைப் பார்ப்பது ஒலிகளைக் கேட்பது; அவற்றின் வாழ்விடங்களையும், உணவுப் பழக்கங்களையும் அறிந்து கொள்வது.
இரண்டாவது, பறவைகளைப் பார்ப்பதற்காகவே சிறப்பாக அமைக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் உள்ள இடங்களுக்கே பயணம் செய்து பார்வையிடுவது. கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் பலர். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு பறவைகளைத் தேடும் மனம் கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கின்றார்கள். அதற்குப் பயணப்படுதல் அவசியமாகிறது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும் கூட இரசிப்புத் தன்மையும், கூர்ந்து நோக்கும் பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
அதிகாலைப் பொழுதில், பனித்துளிகள் பூமியெங்கும் பரவிக் கிடக்கும் வேளையில், பனிக்காற்றில் மிதந்தபடியே ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைக் காணும் நம் விழிகள் வியப்பில் விரிகின்றன. மேலும், அவற்றின் இனிமையான இசையின் ஓசைகள் செவிகளில் கேட்கும் போது புரியாத ஆனந்தமும், மேனிக்குள் குளிர்காற்றும் வந்து மெல்லத் தாலாட்டிச் செல்கின்றன. கரைகளற்ற ஒரு நதியைப் போல எல்லா திசைகளிலும் பாய்ந்தோடி, பகலோடு நெருக்கமாகவும், இரவோடு இனிமையாகவும் வாழுகின்றன பறவைகள். சில வகையான பறவைகள் வலசைப் பயணத்தை மேற்கொள்கின்றன. அவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிக்கும் போது ஒளிப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை; குறிப்பேடுகளில் குறித்துக் கொள்ளும் வழக்கமும் கிடையாது. ஆனால், தங்கு தடையின்றி அவை இலக்குகளை நோக்கிப் பறந்து செல்கின்றன. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீர்நிலைகளுக்கு லட்சக்கணக்கான பறவைகள் வலசை வந்து ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றன.
ஈப்பிடிப்பான் எனும் பறவை இந்தியா, இலங்கை, சீனா, நேபாளம் மற்றும் மியான்மர் பகுதிகளில் வாழ்கின்றது. மேலும் இவை இடம் பெயர்ந்து வெப்ப மண்டல ஆசியாவில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன. ஈப்பிடிப்பான் தனித்தோ இணையாகவோ மரங்கள தோப்பிலும், அடர்ந்த காடுகளிலும், குறைவான இலையுதிர் காடுகளிலும் மூங்கில் பள்ளத்தாக்குகளிலும் வசிக்கும். சில நேரங்களில் நம் வீட்டுத் தோட்டங்களிலும் இவற்றைக் காணலாம். சுமார் 13க்கும் மேற்பட்ட இப்பறவையினங்களில் நாம் காணவிருப்பது அரசவால் ஈப்பிடிப்பான். அரசவால் ஈப்பிடிப்பான் பறவைக்கு வேதிவால் குருவி, அரிவால் குருவி போன்ற செல்லப் பெயர்களும் உண்டு. இப்பறவையின் அறிவியல் பெயர் தெர்ப்சிபோன் பாரடிஸ்ட் (TERPSIPHONE PARADIST) என்பதாகும். இது புலம் பெயரும் பறவையாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரம் வரை இப்பறவையைக் காண முடியும். பறக்கும் போது மேலே உயர்ந்தும் கீழே தாழ்ந்தும் அலை போலப் பறக்கும். அதன் வால் இறகுகள் கொடிபோல பின்னால் ஆடிக் கொண்டே போவதைக் காணும் கண்கள் ஆனந்தம் பெறுகின்றன.
இது ‘புல் புல்’ என்னும் கொண்டைக் குருவி அளவில் உள்ள சிறிய பறவையாகும். ஆண் பறவைக்கும் பெண் பறவைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. ஆண் பறவை நீண்ட வாலைக் கொண்டு காணப்படும். இது சுமார் 18 செ.மீ. முதல் 23 செ.மீ வரை இருக்கும். இப்பறவைக்கு இரண்டு மய்ய வால் இறகுகள் நீளமாகத் தொங்கும். இதனுடைய நீளம் சுமார் 60 செ.மீ வரையிருக்கும். ஆண் பறவை இரு வேறு நிறங்களில் காணப்படுகின்றன. முழுவதும் வெள்ளை இறகுகளுடன் வால் இறகுகளின் விளிம்புகளில் கருப்பு நிறத்தில் இருப்பது ஒரு வகை; மற்றொன்று, கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடன் தலைப்பகுதி மினுமினுப்புள்ள கரிய நிறமுடையது. கண்கள் கருப்பு நிறத்திலும் கண்களைச் சுற்றிக் காணப்படும் வளையங்கள் அடர் நீலக் கருப்பு நிறத்திலும் இருக்கும். இப்பறவையின் கால்கள் குறுகியவை. மரக்கிளைகளில் அமரும்போது நிமிர்ந்து உட்காரும். இதன் நீண்ட இறகுகள் காற்றில் அசைந்தாடுவது நடனம் ஆடுவது போல் இருக்கும். இதன் அழகில் மயங்கி நிற்கின்றன பெண் பறவைகள். பொதுவாக இப்பறவைகள் எழுப்பும் ஒலி காதுக்கு இனிமை தராது. ஆனால் இணை சேரும் போது எழுப்பும் ஒலியானது இனிமையாக இருக்கும்.
பெண் பறவை குறுகிய வாலுடையது. கருப்புநிறத் தலையும் செந்நிற இறக்கையும் கொண்டுள்ளது. இதன் தொண்டை மற்றும் அதன் கீழ்ப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். பெண் பறவைகள் 20 செ.மீ. நீளம் வரை வளரும். பொதுவாக இப்பறவைகள் ஈ, கொசு, ஈசல், பட்டாம்பூச்சி போன்ற பூச்சியினங்களையே விரும்பி உண்ணும். இரைக்காகக் காத்திருக்கும் இப்பறவை, பறந்து செல்லும் பூச்சிகளையும் மின்னல் வேகத்தில் பறந்து சென்று பிடிக்கும். சில பூச்சிகள் தப்பிச் செல்ல முயன்று இங்குமங்கும் போக்குக் காட்டிச் சுழன்றாலும் அதற்கு இணையாக இப்பறவையும் சுழன்றும், சில சமயங்களில் குட்டிக்கரணம் போட்டும் அப் பூச்சியைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளும்.
மார்ச் முதல் ஜூலை வரை இனப்பெருக்கக் காலமாகும். இக் கால கட்டத்தில் ஆண், பெண் இரண்டுமே சேர்ந்து ஒரு தாழ்வான மரக்கிளையின் நுனிப்பகுதியில் சிறிய வேர்கள், நாரிழைகள், இலை மற்றும் தழைகளைக் கொண்டு சுமார் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கான அழகிய கூட்டைக் கட்டுகின்றன. இதில் சுமார் 3 அல்லது 5 முட்டைகள் வரை இட்டு 14 முதல் 18 நாட்கள் வரை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. அக்குஞ்சுகள் சுமார் 15 நாட்களில் இறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்குகின்றன.
வான்வெளி எங்கும் வானவில்லைப் பரவச் செய்யும் பறவைகளால்தான் மலைகள் யாவிலும் மரங்கள் ஆடையாகவும், நிலங்கள் யாவிலும் வித்துகளைப் பரவச் செய்து, பூமிப்பந்தை பசுமையாகவும் ஆக்குகின்றன. இப்பசுமையின் நிழலில் தான் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. தற்போது பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாறிவிட்டதாலும் பருவ மழை பொய்த்துவிட்டதன் விளைவாலும் சிங்கம், புலி, கரடி சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் நகரப் பகுதிகளில் நடமாடத் தொடங்கிவிட்டன. இச்சூழலை மாற்றிட நாம் மரங்களையும், மரங்களைப் பரவச் செய்யும் பறவைகளையும் பாதுகாத்திட வேண்டும். மேலும் மக்களிடையே பறவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசு பறவைகளைப் பாதுகாக்கப் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி அதைச் செயல்படுத்தியும் வருகிறது. இச்செயலுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் இருவாச்சி பறவைகள் சிறப்புப் பாதுகாப்பு மய்யம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகக் காணப்படும் பெரிய இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலபார் கருப்பு – வெள்ளை இருவாச்சி, இந்திய சாம்பல் இருவாச்சி ஆகிய நான்கு வகையான பறவைகளுக்குத் தேவையான உணவு மரங்களான அத்தி, சாதிக்காய், கருங்குங்கிலியம் உள்ளிட்ட மரங்களை அதிக அளவில் நட்டு அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதே முக்கிய நோக்கம். மேலும் இப்பறவைகளின் பரவல், இனப்பெருக்கம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
அரசன் எவ்வழி அவ்வழி குடிகள், என்ற பழமொழியின் பொருளுக்கேற்றவாறு நாமும் முதலமைச்சரின் வழி நின்று பறவைகளைப் பாதுகாப்போம்.
பறவையின் அழகு பல்வண்ணங்கள்!
மனிதரின் அழகு நல் எண்ணங்கள்!<