16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்! கின்னஸ் சாதனை படைத்த ‘பெரியார் பிஞ்சு’ ஷிவாங்க்! (பெருமிதம்-1)

பிஞ்சண்ணா
ஜெர்மன் நாட்டின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஷிவாங்க் வருண் வரதராஜன், துபாயில் பிறந்தார். இச்சிறுவனுக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அவரது தாயார் யாழினி வரதராஜன் கூறும்போது, “ஷிவாங்க் குழந்தையாக இருந்தபோதே வீட்டில் கருவி இசைப் பாடல்களைத் தொடர்ந்து ஒலிக்க விடுவோம். இதனால், தனது மூன்றாம் வயதிலேயே தாளம் மற்றும் மெல்லிசைக்கு ஏற்ப துல்லியமாக வாசிப்பான்.
இசையின் தனித்துவமான பாணியை வைத்து இசையமைப்பாளர்களை அடையாளம் காணும் திறனையும் வளர்த்துக் கொண்டான்’ என்றார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14ஆம் நாள் துபாயில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் ஷிவாங்க் பங்கேற்றான். அப்போது, பல்வேறு இசையமைப்பாளர்களின் புகழ்பெற்ற இசைத் துணுக்குகள் வரிசையாக இசைக்கப்பட்டன.
அவற்றைக் கூர்மையாகக் கேட்ட சிறுவன் ஷிவாங்க், ஒரு நிமிடத்தில் பாக், மொசார்ட், பீத்தோவன், சோபின், விவால்டி, சாய்கோவ்ஸ்கி, வாக்னர், பிராம்ஸ் உள்பட 16 இசையமைப்பாளர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினான்.
இதையடுத்து, ஒரே ஒரு நிமிடத்தில் (குறைந்த நேரத்தில்) நிதானத்துடனும் மிகுந்த கவனத்துடனும் செயல்பட்டு அனைத்து இசையமைப்பாளர்களையும் சரியாக அடையாளம் கண்ட ஷிவாங்கிற்கு கின்னஸ் உலகச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது. அவனது இந்தத் திறமையை ‘அசாதாரண இசைப் பரிசு’ என கின்னஸ் உலக சாதனை அமைப்பு பாராட்டியுள்ளது.
கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்தப் பிஞ்சு ‘ஷிவாங்க்’ நமது பெரியார் பிஞ்சுகளுக்கு அறிமுகமானவர் தான். குழந்தையாக அல்ல; கதாபாத்திரமாக!
ஆம், அய்ன்ஸ்ரூலி என்ற பெயரில் சில ஆண்டுகள் வெளிவந்த அறிவியல் படக்கதைத் தொடரில், ‘ஷிவு’ என்ற பெயரில் வந்த கதாபாத்திரத்தின் உண்மை உரு தான் ‘ஷிவாங்க்’! அவரை கதாபாத்திரமாக உருவாக்கியவர், நிஜத்தில் அவரை உருவாக்கியவரான அவரது தாய் யாழினி – ஆம், அதே, யாழு சிவா தான்!
நம்முடைய பெரியார் பிஞ்சு ஒருவர் கின்னஸ் சாதனையாளராகச் சிறந்திருப்பது பெரியார் பிஞ்சு இதழ் வரலாற்றில் ஒரு மகத்தான மகிழ்ச்சிக்குரிய செய்தி அல்லவா? <



