ஆம்பிளைப் பிள்ளை தண்ணிக் குடம் தூக்கலாமா? நம்ம ஊசர் பாட்டி-4

| க |
ுடி தண்ணீர் பிடிக்கத் தெரு முனையில் இருக்கும் குழாய் அடிக்கு பிளாஸ்டிக் குடத்துடன் புறப்பட்டார் பாட்டி.
குழாய் அடியில் ஏற்கனவே ஆறு, ஏழு குடங்கள் வரிசையில் இருந்தன. குழாயில் இன்னும் தண்ணீர் வரவில்லை. சற்று நேரத்தில் நல்ல தண்ணீர் வரும் அதுவும் ஒரு மணி நேரம்தான் வரும். அத்தோடு நின்றுவிடும். அடுத்த நாள் காலையில் தான் வரும் என்று ஊருக்கே தெரியும். அதனால்தான் அத்தனைக் குடங்கள் குழாய் அடியில் காத்திருக்கின்றன.
பாட்டி, தன் குடத்தை வரிசையில் வைத்துவிட்டு, சில பெண்கள் நிழலில் நிற்கும் மரத்தடிக்குச் சென்று நின்றார்.
மரத்து நிழலில் நின்ற பெண்களில் ஒரு பெண்மணி பாட்டியைப் பார்த்து சிரித்தபடி, “பூட்டிக் கிடந்த திண்ணை வீட்டுக்கு புதுசா வந்திருக்கிங்களா பாட்டிம்மா?” என்றார்.
“நான் பிறந்தது, வளந்தது எல்லாமே இந்த ஊருதான். கல்யாணமாகி சென்னைக்கு போயிட்டேன். நாப்பது வருஷத்துக்குப்பிறகு மறுபடி வங்திருக்கேன்.”
“அப்படியா சேதி. அதான் எங்களுக்குத் தெரியல” என் மற்றொரு பெண் சொன்னார்.
“அடிக்கடி யாராவது வந்து போனா தெரியும். இருபது வருஷத்துக்கு முன்னாடி அந்த வீட்டுலே இருந்த பெரியவரும், அவங்க சம்சாரமும், அடுத்தடுத்து இறந்து போனாங்க. அத்தோட அந்த வீட்டுக்கு யாருமே வரலே பூட்டியே கிடக்குது” என்றார் இன்னொரு பெண்.
“இப்பதான் நான் வந்துட்டேனே இனி நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேதான் இருப்பேன். இறந்து போனது எங்க அப்பா அம்மா தான்.”
“ஓ… நீங்க அவங்க மகளா? உங்க கூட யாரு இருக்காங்க?” என்று கேள்வி கேட்டார் இன்னொரு பெண்மணி.
“என் கூட நீங்க எல்லாரும்தான் இருக்கீங்களே… எனக்கென்ன கவலை.”
“உங்களுக்குச் சொந்த பந்தம்னு யாரும் இல்லியான்னு கேட்டோம்.”
“அதான் நீங்கல்லாம் இருக்கீங்களே”
“கமலா ….. நாமதான் சொந்தமாம். நாளைலே இருந்து பாட்டி வீட்டுக்கே சாப்பிடப் போகலாம்டி.” என கேலியாகச் சொன்னார் மங்களம்.
“இன்னைக்கே.. வாங்க. எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவோம்.” என்றார் பாட்டி.
“பாட்டிக்குப் பெரிய மனசுடி. நம்ம எல்லாரையும் சாப்பிட கூப்பிடுறாங்க. என்ன சமையல் பாட்டி?” என்றார் கமலா.
“இனிமேதான் சமைக் கணும். எத்தனைப் பேர் வர்றீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சூப்பரா சமைப்பேன். யாரு வர்றா சொல்லுங்க” என சிரித்தபடி கேட்டார் பாட்டி.
அந்த நேரம் அங்கு வந்த மங்களத்தின் மகன் “அம்மா தண்ணி புடிச்சிட்டியா.. நான் கொண்டு போறேன்” என்றான்.
“டேய்! ராஜா, இன்னும் தண்ணியே வரலே. வந்தாலும் என் குடம் நாலாவதா இருக்கு. புடிக்க நேரமாகும். நீ போ! ஆம்பளைப் பிள்ளை, நீ எதுக்கு தண்ணியெல்லாம் தூக்கிக்கிட்டு. அக்கா மாலாவை அனுப்பி விடு” என்றார் மங்களம்.
இதைக் கேட்ட பாட்டி. “ஏம்மா மங்களம் ஏன் ஒரு குடம் தண்ணியை உன் மகன் தூக்க மாட்டானா?” என்றார்.
“தண்ணிக் குடம் தூக்குறதா ஆம்பளைப் புள்ளை வேலை?”
“ஒ… வேலையிலக் கூட ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு இருக்கா என்ன? யாருக்கு வாய்ப்பிருக்கோ.. அவங்க அந்த வேலையைச் செய்ய வேண்டியதுதான் என்றார் பாட்டி.
“உங்க வீட்டுலெ எல்லாம் ஆம்பளைங்க வெளியில போறதுனால… நீங்க தண்ணி புடிக்க வந்திருக்கீங்க. குடும்பம்னு இருந்தா எல்லாருமே ஆளுக்கு ஒரு வேலை செய்தாத்தானே நல்லது.”
“பாட்டி! நீங்க சொல்றதைக் கேக்க நல்லாயிருக்கு. ஆனா எத்தனை வீட்டுல அப்படி செய்ய முடியும்?” என்றார் கமலா.
“இன்னையில இருந்து ஒவ்வொருத்தர் வீட்டுலயும் எல்லா வேலையையும் எல்லாரும் பகிர்ந்து செய்யலாம்ன்னு பேசிப் பாருங்க. முடிஞ்ச வேலையை மத்தவங்க செய்தா நல்லதுதானே..” என்றார் பாட்டி.
பாட்டி சொன்னதை எல்லாரும் கவனித்தனர். “பாட்டிம்மா! எங்க வீட்டுல நாலு பேரு இருக்கோம். எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்சதும் அவங்கவங்க கையைக் கழுவிக்கிட்டு கிளம்பிப் போயிடுவாங்க. சாப்பிட்ட தட்டு, தண்ணி குடிச்ச டம்பளரு எல்லாத்தையும் நான்தான் கழுவுறேன்” என வருத்தத்தோடு சொன்னார் மீனா.
“ஒரு வீட்டுல ஒரு ஆளு மூணு வேளை சாப்பிடுறாங்க. அப்ப ஒரு தட்டை ஒரு நாளைக்கு மூணு தடவை கழுவணும். மாசத்துக்கு 30 நாளைக்கு 90 தடவை கழுவணும். நாலு பேருண்ணா 360 தடவை கழுவணும். தேச்சிக் கழுவுறதுலே பாத்திரம் தேயுதோ இல்லியோ. பொம்பளை கையிலை இருக்கிற ரேகையெல்லாம் தேஞ்சிடும்.”
“என்ன செய்ய? ஆண்டவன் நம்ப தலையில அப்படித்தான் எழுதி வச்சுட்டான்” என்றார் கமலா.
“ஆண்டவன் அப்படி எழுதுற வரைக்கும் ஏம்மா தலையைக் காட்டிக்கிட்டே நின்னே. ஆமா…. கமலா நீ என்ன படிச்சிருக்கே?” என்று கேட்டர் பாட்டி.
“மூணாவது கூட சரியா படிக்கலை பாட்டி”. “மூணாவது கூட படிக்காத நீ ஆண்டவன் எழுதுன தலையெழுத்தை மட்டும் அழகாப் படிக்கிறே? இப்படி ஆண்டவன் எழுதுனான்னு நம்பி, நம்மளை நாமே தாழ்வா நினைக்காம… அதை மாத்தி புது வழியைக் கண்டு புடிப்போம்.”
“அது என்ன புது வழி!” மங்களம் கேட்டார். “இங்கே இருந்து பஸ் ஸ்டான்டுக்குப் போக எது வழி?”
“நேரா இந்த ரோட்டுலேயே போனா அரை கிலோ மீட்டர் போகணும். அதோ அந்த பொட்டிக் கடை சந்து உள்ள பூந்து போன கொஞ்ச தூரத்திலேயை பஸ் ஸ்டாண்டு. வண்டி வச்சிருக்கிறவய்க ரோட்டு வழி போலாம். நடந்து போறவங்க, அந்த ஷாட்டு வழியிலே போலாம்.” என்றார் மங்களம்.
“ரோட்டு வழி இருக்கும் போதே ஒரு ஷாட்டு வழி கண்டுபுடிச்சுப் போற மாதிரி. வீட்டு வேலையிலேயும் ஆண் வேலை, பெண் வேலைன்னு பிரிக்காம எல்லாரும் எல்லாத்தையும் செய்யிற மாதிரி புது வழியைக் கண்டு புடிப்போம். அதுக்கு நாம எல்லாரும் நேரம் கிடைக்கும் போது சேந்து பேசுவோம்” என்றார் பாட்டி.
“நல்ல யோசனை. அப்படியே செய்யலாம் பாட்டி. எங்கே சேந்து பேசுறது?” என்று கேள்வி எழுப்பினார் கமலா.
“எதுக்கு இருக்கு… நம்ம வீட்டுத்திண்ணை. அங்கேயே கூடுவோம்.”
அதற்குள் “தண்ணி வந்துடுச்சு! தண்ணி வந்துடுச்சு” என்றார் செல்லம்மா.
குடங்கள் நல்ல தண்ணீரால் நிரம்பின. பாட்டி சொன்னது பெண்கள் மனதில் புதிய செய்திகளால் நிரம்பியது.<
(பாட்டியின் லூட்டி தொடரும்)




