• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கோமாளி மாமா-10 : தலைவன்

2020_oct_v41
அக்டோபர் 2020கோமாளி மாமா

ஓவியம், கதை: மு.கலைவாணன்

மாணிக்கம் கதை கேட்க தோட்டத்திற்குள் நுழையும் போதே செல்வமும், மல்லிகாவும் அங்கே இருந்தனர். வேகவேகமாக வந்த மாணிக்கம் தன் கையிலிருந்த காகிதப் பையை நீட்டி “இந்தாங்க… இனிப்பு’’ என்றான்.

“என்னடா மாணிக்கம்… திடீர்னு  இனிப்பெல்லாம் கொடுக்கிறே… உனக்கு போன மாசமே பிறந்த நாள் வந்து போயிடுச்சே”… என்று சந்தேகத்துடன் கேட்டான் செல்வம்.

“அவன் பிறந்தநாளுக்குதான் நமக்கெல்லாம் வீட்டுல விருந்து வச்சானே! ஆமா இது எதுக்குன்னு சொல்லு மாணிக்கம்’’ என்றாள் மல்லிகா.

“இதுவா… எங்க வகுப்பு பசங்க எல்லாரும் சேந்து என்னை வகுப்புத் தலைவனா… தேர்ந்து எடுத்திருக்காங்க’’… என தலை நிமிர்ந்து சொன்னான் மாணிக்கம்.

“ஓ… கோ… தலைவராயிட்டதுக்குதான் இந்த இனிப்பா! இதோ… கோமாளி மாமாவும் வந்துட்டாங்க… அவர்களுக்கும் கொடு’’… என்றான் செல்வம்.

உடனே பையை கோமாளி மாமாவின் முன் நீட்டினான்… மாணிக்கம். இனிப்பை எடுத்தபடி கோமாளி மாமா, “வகுப்புத் தலைவரானதுக்கு வாழ்த்துகள் மாணிக்கம்’’ என்றார்

“நன்றிங்க மாமா’’ என்று சிரித்தபடி சொன்னான் மாணிக்கம்.

“வகுப்புத் தலைவராயிட்டியே… இனி நீ என்ன செய்வே’’… என்று கேட்டார் கோமாளி

அவன் என்ன செய்வான்? மணி அடிச்சு வகுப்புக்குள்ள ஆசிரியர் வர்றதுக்குள்ள யார்… யார் பேசுனாங்க அப்படின்னு பேர் எழுதி வச்சிருந்து அவர் வந்ததும் போட்டுக் கொடுப்பான்.’’ என்றான் செல்வம்.

“இதுவா வகுப்புத் தலைவனோட வேலை’’ என வியப்பாக கேட்டார் கோமாளி.

“அடுத்தவங்களை போட்டுக் கொடுக்கிறது. மத்தவங்களை மாட்டி விடுறது… எல்லாத்திலேயும் போயி, தான் முன்னாடி நின்னுக்கிறது இதெல்லாந்தான் வகுப்புத் தலைவனோட வேலை… வேற என்ன புதுசா செய்யப் போறான்’’ என்று கேலியாகச் சொன்னாள் மல்லிகா.

“தலைவனாகிறது சுலபம். அதுக்குத் தகுதி ஆகறதுதான் கடினம். அதுக்குப் பொருத்தமான கதை ஒன்னு சொல்றேன் கேளுங்க.

மன்னர்கள் நாட்டை ஆண்ட அந்தக் காலத்திலே நாட்டை ஆளும் மன்னருக்கு வயசு கூடிட்டா தன்னுடைய வாரிசான தன் மகனை மன்னர் ஆக்குறதுதான் வழக்கம். அதுக்காக தன் வாரிசுக்குப் போர்ப் பயிற்சி, குதிரை ஏற்றப் பயிற்சி இப்படிப் பல பயிற்சிகளை சின்ன வயசிலிருந்தே கொடுத்து இளவரசரா அவங்களை உருவாக்குவாங்க.

அப்படி எல்லாப் பயிற்சியும் முறையா பயின்ற இளவரசன்தான் வேங்கையன். அவன் மகுடபுரி நாட்டு மன்னர் அகநல்லரின் மகன்.

அகநல்லருக்கு வயது கூடிட்டதாலே மகன் வேங்கையனுக்கு முடிசூட்ட அமைச்சர்கள், குடும்பத்தினர் எல்லாரும் விருப்பப்பட்டாங்க.

ஆனால், அரசை அகநல்லர் தன் மகன் வேங்கையனை அழைத்து, “முடிசூட்டிக் கொள்ள உனக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும். தலைவன் என்றால் யார்? அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டுமென தெரிந்து வந்து எனக்குத் தெளிவாக விளக்க வேண்டும். நீ தரும் விளக்கம் எனக்கு மன நிறைவு தந்தால்தான் நான் உனக்கு மகிழ்ச்சியாக முடி சூட்டுவேன்… அதற்காக ஒரு மாத காலம் நான் காத்திருப்பேன். அதற்குள் கண்டறிந்து வா…” என்றார்.

வேங்கையனும் தலைவன் என்றால் யார்? அவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்கினான்.

பல நாள் பயணம் செய்தான். நாடு, நகரம், காடு, மலையென பல இடங்களில் அலைந்தான். அவர் தந்தை கேட்ட கேள்விக்கான விடை கிடைக்கவில்லை.

விடை தெரியாமல் தந்தை முன் எப்படிப் போய் நிற்பது என வருத்ததுடன் காட்டுப் பகுதியில் ஒரு பெரிய மரத்தடியில் படுத்தான், பகல் நேரம். அமைதியான சூழல். மரத்தின் குளிர்ந்த காற்று பயணம் செய்த சோர்வு… களைப்பில் தூங்கிவிட்டான்.

தூக்கத்தில் தன்னை யாரோ கயிற்றால் இறுக்குவது போல் உணர்ந்து விழித்தான். பார்த்தால் தன்னை ஒரு மலைப்பாம்பு சுற்றி இருந்தது. உடனே… அதனுடன் கடுமையாகப் போராடி உடம்பிலிருந்து விடுவித்து வீசி எறிந்தான்.

தூரத்தில் போய் விழுந்த பாம்பு எங்கோ ஊர்ந்து மறைந்தது.

நடந்தவற்றையெல்லாம் சற்று தூரத்தில் மூலிகை பறித்துக் கொண்டிருந்த முதியவர் கை தட்டிப் பாராட்டியபடி வேங்கையன் அருகில் வந்தார்.

“ஏனப்பா! உன்னை இறுக்கி விழுங்க இருந்தது அந்த மலைப்பாம்பு. இடுப்பில் வாள் இருந்தும் அதை எடுத்து வெட்டாமல் கடுமையாக முயற்சித்து அந்தப் பாம்பைக் கழற்றி வீசி எறிந்தாயே ஏனென்று தெரிந்து கொள்ளலாமா?’’ என்று கேட்டார் முதியவர்.

“அய்யா அந்த மலைப்பாம்புக்கு பசி உணர்ச்சி தானே தவிர, பகை உணர்ச்சி இல்லை. எதற்காக அதை வெட்ட வேண்டும். என்றுதான் தூக்கி எறிந்துவிட்டேன்’’. என்றான் வேங்கையன்.

“அடடா, இதுதான் உண்மையான வீரனுக்கு அழகு! நீ யார்? எதற்காக இந்தக் காட்டுவழி வந்தாய் என நான் அறியலாமா? என ஆவலாய்க் கேட்டார் முதியவர்.

“அய்யா! நான் மகுடபுரி நாட்டு அரசர் அகநல்லரின் மகன் வேங்கையன். முடி சூட இருந்த என்னிடம் என் தந்தை கேட்ட கேள்விக்கு விடை தேடி அலைகிறேன். ஆமாம்! தாங்கள் யார்?’’ எனக் கேட்டான் வேங்கையன்.

“நானா… நான் ஒரு நாட்டு மருத்துவன் நஞ்சு முறிக்கும் மூலிகைகளைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு வழங்குவது என் பணி… அது சரி… தந்தை அப்படி என்ன கேள்வி கேட்டார்?… அதற்காக நீ ஏன் இவ்வளவு தூரம் அலைய வேண்டும்?’’ என்றார் முதியவர்.

“தலைவன் என்றால் யார்? அவன் எப்படிப்-பட்டவனாக இருக்க வேண்டும்? இதுதான் என் தந்தை கேட்ட கேள்வி’’.

“இவ்வளவுதானா? அதோ, அதுதான் என் குடில். அங்கு வந்தால் இதற்கான விடையைத் தருவேன்’’ என முன் நடந்தார் முதியவர். பின் தொடர்ந்தான் வேங்கையன்.

குடிலுக்குள் நுழைந்த முதியவர் மூன்று கண்ணாடிக் குவளைகளை எடுத்து வந்து குடிலின் நீர் கொண்டு வந்து மூன்று கண்ணாடிக் குவளைகளிலும் ஊற்றி நிரப்பினார். மீண்டும் உள்ளே சென்று மூன்று சிறிய தட்டுகளைக் கொண்டு வந்து கண்ணாடிக் குவளைகளின் முன் வைத்தார். ஒன்றில் மண், அடுத்ததில் இலவம்பஞ்சு மற்றொன்றில் கற்கண்டு இருந்தது.

வேங்கையன் பொறுமை இழந்து’’ அய்யா! விடை சொல்கிறேன் என அழைத்து வந்து வேடிக்கை காட்டுவது போல் ஏதோ செய்கிறீர்களே… எனக்குப் புரியவில்லையே’’ என்றான்.

“உனக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் தெரிய வேண்டிய விடை. இது தெரியாததால்தான் நாட்டில் பல வேடிக்கை நடக்கிறது. சற்று நேரத்தில் விடை தெரியும் இங்கே வாருங்கள். இந்த மண், பஞ்சு, கற்கண்டு இந்த மூன்றையும் மூன்று கண்ணாடிக் குவளைகளில் தனித்தனியே போடுங்கள் என்றார்.

வேங்கையனும் முதல் குவளையில் மண், அடுத்ததில் பஞ்சு, அதற்கடுத்ததில் கற்கண்டு எனப் போட்டான் சிறிது நேரத்தில் மண் கலந்த குவளை நீர் அழுக்கானது. பஞ்சு போட்ட குவளை நீரை பஞ்சு உறிஞ்சியிருந்து கற்கண்டு நீரில் கரைந்திருந்தது.

“தம்பி! இதில் எந்த நீர் பருகுவதற்கு ஏற்றது?’’ என்றார் முதியவர்.

“இதிலென்ன சந்தேகம்? கற்கண்டு கலந்த நீர்மட்டும்தான் பருகுவதற்கு ஏற்றது. மண் கலந்த நீர் பாழாகிவிட்டது. பஞ்சு விழுந்த நீர் காணவேயில்லை. பஞ்சு மொத்த நீரையும் உறிஞ்சிவிட்டது’’. என்றான் வேங்கையன்.

“சில தலைவர்கள் மண்போல…! மக்களென்றும் நீரோடு கலந்தால் தன் அழுக்கால் மக்களையும் அழுக்காக்கி பயனற்றவர்களாக மாற்றி விடுவார்கள்.

சில தலைவர்கள் பஞ்சு போல மக்களை உறிஞ்சி எடுத்து உணர்வற்றவர்களாக, ஒன்று-மில்லாதவர்-களாக ஆக்கி விடுவார்கள்.

ஒரு சில தலைவர்கள்தான், கற்கண்டு நீரில் கரைந்து சுவை கூட்டி இருப்பது போல மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களுக்காகவே கரைந்து மனித சமூகத்துக்கே சுவையேற்றுவார்கள்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல் மக்களின் நலனில் அக்கறை காட்டுகிற கற்கண்டுத் தலைவனே சிறந்தவன்’’ என்றார் முதியவர்.

அவரை வியந்து பார்த்த வேங்கையன் இரு கை கூப்பி வணங்கி, “விடையைச் சொல்லாமல் செயலால் விளக்கிய நாட்டு மருத்துவரே! வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி செலுத்துவேன். தாங்கள் உணர்த்திய உண்மையை ஒரு நாளும் மறவேன். நான் வருகிறேன்’’ என்று புறப்பட்டான் வேங்கையன்.

“மக்கள் தலைவனே… சென்றுவா’’… என வாழ்த்தி வழியனுப்பினார் நாட்டு மருத்துவர், முதியவர்.

“கோமாளி மாமா! போதும், கதை. வேங்கையனுக்கு மட்டுமில்லே, வகுப்புத் தலைவனான எனக்கும் தெளிவாப் புரிஞ்சிடுச்சு’’. என்றான் மாணிக்கம்.

குழந்தைகள் ‘தலைவன் என்றால் யார்? அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பதை உணர்ந்தபடி புறப்பட்டனர்.

‘பெரியவர்களுக்கு இன்னும் புரியலியே…’ என்ற ஏக்கத்தோடு நடந்தார் கோமாளி.

– மீண்டும் வருவார் கோமாளி

22
உலக நாடுகள்: லைபீரியாஉலக நாடுகள்: லைபீரியா15th October 2020
கணிதப் புதிர் சுடோகு15th October 2020கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2022_jan_v35
கதைகோமாளி மாமாஜனவரி 2022
5th January 2022 by ஆசிரியர்

கோமாளி மாமா-22 : சிறப்பு

Read More
2020_oct_v8
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

துடுக்குத் தம்பி!

Read More
2020_oct_v23
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

சர் ஸ்டாம்போர்டு ரஃபேல்சும், தந்தை பெரியாரும்

Read More
6
கதைகோமாளி மாமாஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by மு. கலைவாணன்

கோமாளி மாமா-36 : புத்தியைத் தீட்டு

Read More
2021_jul_v25
கோமாளி மாமாஜூலை 2021
4th July 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-17 : சொல்லும் செயலும்

Read More
2020_oct_v33
அக்டோபர் 2020
15th October 2020 by ஆசிரியர்

PERIYAR 142 – Why I like PERIYAR THATHA?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p