மகிழதிகாரம்
![2017_oct_s10](https://periyarpinju.com/wp-content/uploads/2017/10/2017_oct_s10.jpg)
மகளைத் தூக்கியபடி
மழை முடிந்த ஒரு மாலையில்
சாலையில் நடந்தேன்.
சேரும் சகதியுமாக இருந்த
சென்னை மாநகராட்சிச் சாலை அது!
‘மகிழ், இங்க பாரு
இது தான் சகதி.
இது மாதிரி இடத்தில்
கவனமா நடக்கணும்.
இல்லைன்னா வழுக்கி விழுந்திடுவோம்.
சரியா?’ என்றேன்.
உடனே என் சட்டையை
இறுக்கிப் பிடித்தாள்.
நான் புரியாமல் விழித்தேன்.
தான் விழாமலிருக்க
என்னைப் பிடிக்கிறாளோ
என நினைத்தேன்.
அவள் சொன்னாள்:
“அந்த சகதியில்தானே நடக்கறீங்க..
நீங்க விழாம
நான் புடிச்சுக்கிறேன்”
குடை இருந்தென்ன?
மழலையில் நனைந்தேன்.
பாசு.ஓவியச்செல்வன்