• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா?

2020_aug_v32
ஆகஸ்ட் 2020கோமாளி மாமா

விடுமுறை நாள் மாலை நேரம் பூங்காவில் கதை சொல்ல கோமாளி மாமா வந்தார். வழக்கமாகக் குழந்தைகள் வரும் மரத்தடியில் ஒருவரையும் காணோம். சரி குழந்தைகள் எப்படியும் வந்துவிடுவார்கள் என காத்திருந்தார் கோமாளி.

மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் ஒன்றாகப் பூங்காவுக்குள் வந்து கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்தே கோமாளி மாமா இருப்பதை பார்த்த மல்லிகா “மாணிக்கம் அங்கே பாரு… கோமாளி மாமா நமக்கு முன்னாடியே வந்துட்டாங்க’’ என்றாள். “நான் சரியான நேரத்துக்குப் புறப்பட்டுட்டேன். இந்த செல்வம் பயதான் இதோ இதோன்னு நேரமாக்கிட்டான்’’ என்று அலுத்துக் கொண்டான் மாணிக்கம். “சரி… அதுக்கு என்ன செய்ய முடியும்… என்னதான் முயற்சி செய்தாலும் நடக்கிறதுதான் நடக்கும். இன்னைக்கு கோமாளி மாமா சீக்கிரம் வந்துட்டாரு. அதுக்குப் போயி பள்ளிக் கூடத்துக்கு லேட்டா போற மாதிரி பயப்புடுறிங்க. வேகமா வாங்க. நான் பேசி சமாளிக்கிறேன்’’. என்று ஆறுதல் சொல்லியபடி வேகமாக நடந்தான் செல்வம்.

மூவரும் கோமாளி மாமாவின் அருகில் வந்ததும் “இன்னைக்கு உங்களுக்கு முன்னே நான் வந்துட்டேன். காரணம் என்னன்னா… என்னைப் பார்க்க என் நண்பர் வீட்டுக்கு வந்தாரு. அவரை வழியனுப்ப அவரு கூட பேசிக்கிட்டே வந்தேன். அப்படியே இங்கே வந்துட்டேன்’’ என்றார் கோமாளி.

“நான் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுச்சுங்க மாமா… என்னாலேதான் இவங்க ரெண்டு பேரு வர்றதுக்கும் நேரமாயிடுச்சு’’ என்றான் செல்வம்.

“சரி… சரி… மாமா…. இன்னைக்கு  என்ன கதை சொல்லப் போறீங்க?’’ என கவனத்தைத் திருப்பினான் மாணிக்கம் “மாமா…. நீங்க நிறைய ஊருக்கெல்லாம் போயிருப்பீங்க… அந்தப் பயண அனுபவத்தை சொல்லுங்க மாமா’’… என்றாள் மல்லிகா.

“பயண அனுபவமா! உம்… அதை விட முக்கியமா ஒரு பயணத்தின் போது என்னோட பயணம் செய்தவர் சொன்ன அனுபவத்தை சொல்றேன்.

திருச்சியிலேயிருந்து சென்னைக்கு ஒரு முறை பகல் நேரத்துலே பேருந்தில்  வந்துக்கிட்டிருந்தேன். அப்ப பக்கத்துலே ஒருத்தர். திருச்சியிலே ஏறுனவர் உங்காந்திருந்தாரு. அவரு எங்கிட்ட “ஏங்க நீங்க சென்னைக்குப் போறீங்களான்னு கேட்டாரு. ஆமான்னு சொன்னேன். செங்கல்பட்டு வந்ததும் கொஞ்சம் சொல்லுங்க. நான் அங்கே தான் இறங்கணும்னு’’ சொன்னாரு “சரிங்க… செங்கற்பட்டு வந்ததும் சொல்றேன்’’னு சொன்னேன்.

அவரு, “உங்களைப் பார்த்தா வித்தியசமா தெரியிறீங்க, நீங்க நடிகரா?”ன்னு கேட்டாரு. “ஆமா நான் நாடக நகைச்சுவை நடிகர்’’னு சொன்னதும்… “அடடா… அப்படியா’’ன்னு அவரு கதையை எங்கிட்ட சொன்னாரு.

“எனக்கு சொந்த ஊரு செங்கற்பட்டு. எனக்கு ஒரு மகன். அவரு மறைமலை நகர்லே ஒரு தனியார் கம்பெனியிலே வேலை செய்யிறாரு. அதனாலே அங்கேயே வாடகை வீட்டுலே இருக்காரு திருமணமாகி ஒருவயசுலே ஒரு பெண் குழந்தையும் இருக்கு. போன மாசம் ஒருநாள் எனக்குப் போன் பண்ணி, ‘அப்பா! அம்மாவைக் கூட்டிக்கிட்டு நாளைக்கு காலைலே மறைமலை நகர் வீட்டுக்கு வாங்க! நாம எல்லாரும் நாளைக்கு மதியம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வாடகைக் கார் எடுத்துக்கிட்டு போவோம். ஒரு ராத்திரி அங்கே தங்கி இருந்துட்டு வருவோம். எங்கூட வேலை செய்யிறவரு போன வாரந்தான் போயிட்டு வந்தாராம். அப்படி ஒரு ராத்திரி தங்கியிருந்துட்டு வந்தா ரொம்ப நல்லதாம். கஷ்டமெல்லாம் போயி நல்லது நடக்குமாம். வாங்க… போயிட்டு வந்துரலாம்’னு கூப்பிட்டான்.

எனக்கு அதிலேயெல்லாம் விருப்பம் இல்லேன்னாலும்… கருத்து எதுவும் சொல்லாமல் சரி வர்றேன்னு சொல்லிட்டு மறுநாள் காலையிலே மறைமலைநகர் மகன் வீட்டுக்கு மனைவியை அழைச்சுக்கிட்டு போயிட்டேன். மதியம் ரெண்டு மணி அளவிலே கார் வந்துது. நான், என் மனைவி என் மகன், அவன் மனைவி, குழந்தை எல்லாரும் ராத்திரி தங்க, காலையிலே குளிச்சிட்டு மாத்திக்க துணி மணிகளை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டோம்.

வழியிலே வேற ஒரு வண்டி விபத்தாகி இருந்ததாலே கோயில் கிட்ட போயி சேரும்போது ராத்திரி மணி ஒன்பதரை ஆயிடுச்சு. கோயில் வாசல் கதவே மூடியிருந்தது.

பூஜைக்காக வாங்கிட்டு வந்திருந்த தேங்காய், பழம், பூவெல்லாம் கோயில் வாசற்படி மேலே வச்சி என் மனைவியும், மருமகளும் கற்பூரம் ஏத்தி கும்பிட ஆரம்பிச்சாங்க. என் மகன் அதுக்கு உதவி செய்துக்கிட்டிருந்தான். நான் சும்மா நிற்காமல் கோயில் வாசல் பக்கத்திலே படுத்துக்கிட்டு இதையெல்லாம் முழிச்சு, முழிச்சுப் பார்த்துக்-கிட்டிருந்த தாடி வச்ச ஒரு ஆளுகிட்ட போயி, “அய்யா! காலையிலே எத்தனை மணிக்கு கோயில் திறப்பாங்க”ன்னு கேட்டேன், “தினமும் காலையிலே நாலரை மணிக்குக் கோயில் திறப்பாங்’’கன்னு சொன்னாரு.

“நல்லா தெரியுமா’’ன்னு கேட்டேன். உடனே அந்த தாடிக்காரரு படக்குன்னு எழுந்திருச்சு உக்காந்து… “ரெண்டு வருஷமா இந்த வாசல்லேயே படுத்துக் கிடந்து பிச்சை எடுக்கிற எனக்கு இது கூட தெரியாமே இருக்குங்களா சாமி’’ன்னு சத்தமா சொன்னாரு. அவ்வளவுதான், இதைக் கேட்ட என் மகன், மருமகள்; மனைவி எல்லோரும் ஒரே நேரத்திலே என்னையும் அந்த தாடிக்காரரையும் பார்த்தாங்க. ரெண்டு வருஷமாக ராத்திரி பகலா கோயில் வாசல்லே படுத்துக் கிடக்குறவரே பிச்சை எடுத்துக்கிட்டுத்தானே இருக்காரு. நாம ஒரு ராத்திரி தங்குனா எப்படி மாற்றம் வரும் அப்படின்னு மனசுக்குள்ள நான் நினைச்சேன். அதுக்குள்ள என் மகன், “அப்பா… இப்பவே வீட்டுக்குத் திரும்பி போலாம்’’ன்னு சொன்னான். எல்லாருமே சரின்னு சொல்லி ராத்திரியோட ராத்திரியா திரும்பி வந்துட்டோம்.’’

அப்படின்னு அவர் குடும்பத்திலே நடந்த ஒரு நிகழ்வைச் சொன்னாரு. நான் அதை இப்ப உங்ககிட்டே சொல்லியிருக்கேன். சிந்திச்சுப் பாருங்க… இதிலே எவ்வளவு உண்மையும், வாழ்க்கைக்கான பாடமும் இருக்குன்னு புரியும்…’’ என்றார் கோமாளி. மாற்றம்… என்பது உழைக்காமல் வராது என்ற உண்மையை புரிந்துக் கொண்ட குழந்தைகள் வீடு நோக்கி புறப்பட்டார்கள்.

– மீண்டும் வருவார் கோமாளி

25
காரணமின்றி ஏற்காதீர்கள் : பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?காரணமின்றி ஏற்காதீர்கள் : பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?1st September 2020
மெய் சொல்லல்1st September 2020மெய் சொல்லல்

மற்ற படைப்புகள்

2020_aug_v38
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா”

Read More
2020_aug_v13
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_oct_v41
அக்டோபர் 2020கோமாளி மாமா
15th October 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-10 : தலைவன்

Read More
2020_aug_v39
அறிவியல்ஆகஸ்ட் 2020கதை
1st September 2020 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : வைரஸ்கள் வாழ்கின்றனவா?

Read More
2020_dec_v25
கோமாளி மாமாடிசம்பர் 2020
28th December 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-11 : உன்னை நம்பு

Read More
2023_jan_28
கோமாளி மாமாஜனவரி 2023
6th January 2023 by ஆசிரியர்

கோமாளி மாமா-33 : மு.கலைவாணன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p