மரங்களை வளர்ப்போம்!

மரங்களை வளர்த்து விட்டால்
மழைமிகப் பொழியும் தம்பி!
மழைமிகப் பொழிந்து விட்டால்
மண்பயிர் செழிக்கும் தம்பி!
மண்பயிர் செழித்து விட்டால்
மன்னுயிர் பசியும் நீங்கும்;
மன்னுயிர் பசியா றிட்டால்
மனதினுள் நிறைவு தோன்றும்!
மனதெலாம் நிறைந்து விட்டால்
மனிதருள் பகைமை மாயும்;
மனிதருள் பகைமாய்ந் திட்டால்
மக்களின் பேதம் நீங்கும்;
மக்களின் பேதம் நீங்கின்
மலர்ந்திடும் மனித நேயம்;
மலர்ந்திடும் நேயத் தாலே
வளர்ந்திடும் சமத்து வம்தான்;
வளர்ந்திடும் சமத்து வத்தால்
வளமுறும் சமதர் மந்தான்;
வளமுறும் சமதர் மத்தால்
வையமே சிறக்குந் தானே!
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை